Wednesday, February 5, 2014

ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை


‘நமசிவாய’ என்பது பகவான் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும்.
ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பற்றி தனது இரண்டு பதிகங்களில் சிறப்பித்து கூறியுள்ளார். அதைப் பற்றி அறியும் முன் ஐந்தெழுத்து மந்திரம் உருவான சூழலைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஐந்தெழுத்து மந்திரம் உருவான சூழல்
பொது திருப்பதிகம்
     பல தலங்கள் தோரும் சென்றடைந்து சிபபெருமானைத் தொழுத வண்ணம் இருந்த ஆளுடைப் பிள்ளைக்கு திருமணம் செய்விக்க எண்ணிய அவரது பெற்றோர் திருநல்லூர் பெருமணத்தில் நம்பியாண்டார் நம்பி என்ற சிவனடியாரின் திருமகளான சொக்கியை நிச்சயம் புரிந்தனர். எந்நேரமும் சிவனையே தொழுத வண்ணம் இருந்த திருஞானசம்பந்தருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லையெனினும், அனைத்தும் இறைவனது சித்தம் என்று பெற்றோரது முடிவிற்கு இசைந்தார். மண்ணோரும் விண்ணோரும் மற்ற யாவரும் இத்திருமணத்தை காண வந்திருந்தனர். அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்தியதால், மனிதரும் தேவராகத் திகழ்ந்தனர். பிறகு, இறைவனது சித்தப்படி, திருஞானசம்பந்தர் சொக்கியைக் கரம் பிடித்தவுடன், ‘இவளொடும் சிவனடி சேர்வள்’ என்று கூறி பொது திருப்பதிகத்தினைப் பாடி திருவைந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பரைசாற்றினார். அதன் பயனாய் திருமணம் காண வந்த அனைவரும் பிறவி பிணி நீங்கி ஈசனது திருவடியில் அழியா இன்பத்தை எய்தினர். பின்பு, திருஞானசம்பந்தரும் அவரது துணைவியாரோடு இறைவனடி சரன் புகுந்தார்.

பஞ்சாக்கரத் திருப்பதிகம்
     திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்ய விரும்பினார் சிவபாத இருதயார். அந்த உபநயனச் சடங்கில் ‘மறை நான்கும் தந்தோம்’ என்றனர் அந்தனர். அப்பொழுது மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது உலகின் முழுமுதற் கடவுளின் திருவைந்தெழுத்தான ‘நமசிவாய’ என்னும் மந்திரமே என்ற பேருண்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் இப்பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடினார் ஆளுடைப் பிள்ளையார்.




மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள 49வது திருப்பதிகமானது பொது நமச்சிவாயத் திருப்பதிகமாகும். இத்திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ மந்திரத்தின் மகிமையை மொத்தம் பத்து பாடல்களில் இவ்வுலகிற்கு எடுத்துணர்த்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

      முதலாவதாக, மனித வாழ்வில் பிறவியெடுக்கும் ஆன்மாவிற்கு இவ்வுலகில் வாழ கிடைக்கப்பெற்றிருக்கும் உடலானது நிறந்தமற்றதாகும். அழிய கூடிய தன்மை கொண்ட உடலில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவிற்கு, நிச்சயமாக அப்பூதவுடல் பேரின்பத்தை அதாவது அழிவில்லாத இன்பத்தை வழங்கும் தன்மை கிடையாது. ஓர் ஆன்மா சென்று அடைய கூடிய இறுதி எல்லை அதாவது முக்தி எனப்படுவதே சைவ சமயத்தில் பேரின்பம் எனப்படுகிறது. இவ்வாறு ஓர் ஆன்மாவிற்கு முக்தி பேறு கிட்ட வகை செய்யும் மந்திரமே ஐந்தெழுத்து மந்திரம் என்று ஆளுடைப் பிள்ளை இப்பதிகத்தில் பாடியுள்ளார். பிறவாமையை மீண்டும் அடையாமல் இறைவனது திருவடிப் பேற்றை முக்தியின் வழி அடைய நாம் கூற வேண்டிய மந்திரம், வேதங்களின் நாயகனான சிவபெருமானதும் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமாகும் என்ற கருத்தை, திருஞானசம்பந்தர், இப்பதிகத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலில்

“காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
      ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது”

என்ற வரிகளின் மூலம் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

      அடுத்ததாக, இறைவனது திருப்பாதங்களைத் தொழுது அவனையே சிந்தையில் பதித்து, நம்பி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அம்மந்திரம் புதுமலரிலிருந்து கிடைக்கப்பெறும் தேனைப் போன்று இனிமையானதாக விளங்கும். ஐந்தெழுத்து மந்திரமானது சுத்தமான உயர்ந்த பொன்னைப் போன்றது என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். எவ்வாறு நாம் இடும் திலகம் நமது நெற்றியின் மையப்பகுதியில் வீற்றிருக்கின்றதோ, அதே போன்று நம் வாழ்விற்குப் பிரதானமாக மையப்பகுதியில் வீற்றிருக்கும் தன்மை உலக நாயகனான சிவனது ஐந்தெழுத்து மந்திரம் ஆகும், என்ற கருத்தினை,

      “ செம்பொ னார்தில கம்உல குக்கெலாம்
      நம்பன் நாமம் நமச்சி வாயாவே”

என்ற திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளின் மூலம் தெள்ளத் தெளிவாக உணர முடிகின்றது.

      அதுமட்டுமின்றி, திருஞானசம்பந்தர் தமது பாடலின் வழி, மானிட பிறவியினரானாலும், அவர்கள் உள்ளம் உருக, மனம் நெகிழ, சித்தமெல்லாம் சிவமயமாய் திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து வருபவர்களாயேனால், அவர்க்ளும் வானுலகத்தை ஆளும் தேவர்களாகும் தகுதியைப் பெறுவர் என்று கூற விழைகிறார். இது,

      “ தக்க வானவ ராத்தகு விப்பது
      நக்கன் நாமம் நம்ச்சி வாயவே”

என்ற பாடல் வரிகளின் மூலம் சுட்டப் பெறுகின்றது.

      மேலும், ‘நமசிவாய’ என்ற நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானது ஐந்தெழுத்து மந்திரத்தை மனம் உவந்து விரும்பி உச்சரிக்கக்கூடிய சிவனடியார்களை எமனும் எமனது தூதர்களும் கூட நெருங்க அஞ்சுவர் என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை, திருஞானசம்பந்தர்,

      “ இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
      நயம்வந்து ஓதவல் லார்தமை நண்ணினால்”

என்ற பாடல் வரியின் வழி நயம்பட எடுத்துரைத்துள்ளார்.

      எல்லோருக்கும் நன்மையையே புரியும் சிவபெருமானது திருநாமமானது ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தாகும். இம்மந்திரத்தை ஏதாவதொரு பூர்வ நல்வினையின் பயனாக உச்சரிக்க நேருமேயேனால், கொலைதொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், எந்த விதமான நற்குணங்களும், நல்லொழுக்கங்களும் இல்லாதவர்கள் ஆயினும், அவர்கள் பாவங்கள் நீங்கி நன்மைகள் கிட்டும். அந்த அளவிற்கு மகிமை வாய்ந்தது இத்திருவைந்தெழுத்து மந்திரம் என்று ஆளுடைப் பிள்ளையார்,

      “கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
      இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
      எல்லாத் தீங்கயு நீங்குவ ரென்பரால்
      நல்லார் நாமம் நமச்சி வாயவே”

என்ற பாடலின் வழி உலக மக்களுக்கு எடுத்துணர்த்தியுள்ளார்.

      இதைத்தவிர, திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பவர்கள், மலை அளவு பாவங்கள் செய்தவர்களாக இருப்பினும், அவர்களுடைய பாவங்கள் நீங்கப்பெறும். அதோடு, பந்தப் பாசத்தால் பிணைக்கப் பெற்றவர்களும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால், பீடிக்கப் பட்டிருந்தாலும் அவர்களது அறியாமை நீங்கப் பெற்று, எல்லையில்லா செல்வமான வீடு பேறு செல்வத்தை அவர்களுக்கு அளிக்கக் கூடிய மகிமையைக் கொண்டது நந்திதேவனை வாகணமாகக் கொண்ட ஈசனது ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மதிரமாகும். இது,

      “ மந்தரம் அன பாவங்கள் மேவிய
      பந்த னையவர் தாமும் பகர்வரேல்
      சிந்தும் வல்வினை செலவமும் மல்குமால்”

என்ற வரியின் வழி உணர முடிகின்றது.

     இதைத்தவிர, சிவனடியார்கள் கேட்கும் வரங்களைத் தரும் சிவபெருமானின் திருவைந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்ற மந்திரத்தை ஓதுபவர்கள் ஏழு நரகங்களுக்குச் செல்லக்கூடிய அளவிற்குப் பாவிகளானாலும், அவர்கள் தங்கள் தீவினைக்கு ஏற்ற தண்டனையை அடைய மாட்டார்கள். அவர்களது பாவங்கள் யாவையும் மன்னித்து, அவர்களை உருத்திர கணத்தாரோடு சேர்த்து சிவபதவியை அடையச் செய்யும் மகிமை இத்திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு உண்டு என்பதனை,

      “நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
      உரைசெய் வாயின ராயில் உருத்திரர்
      விரவி யேபுகு வித்திடும் என்பரால்”

என்று திருஞானசம்பந்தர் தமது பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகின்றது.
     
      இலங்கை வேந்தன் இராவணன், ஆணவங்கொண்டு, தமக்கு வரமளித்த ஈசனையே சீண்டி பார்க்கும் விபரீத விளையாட்டில் ஈடுபட எண்ணம் கொண்டு, ஈசனது இருபிடமான கையாலய மலையை அப்படியே பெயர்த்தெடுத்து, தன் தோள் பட்டையில் வைத்துக் கொள்ள முயன்ற போது, அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு, ஈசன் தனது காற்பெருவிரலை ஊன்றவும் கையிலை மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டான் இராவணன். அவன் அலறி, புலம்பி மன்றாடியபோதும் அத்துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்காத இராவணனுக்கு, அவன் திருவந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த போது சிவபெருமானிடமிருந்து உய்வு கிட்டியது. இதிலிருந்து தீவினையின் காரணமாக துன்பமுற நேரிட்டாலும் அதிலிருந்து நம்மை விடுபட வைக்கும் மகிமை திருவந்தெழுத்து மந்திரத்திற்கு உண்டு. இவ்வுண்மை,

      “ இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
      தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
      மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை

என்ற ஆளுடைப் பிள்ளையாரின் பாடல் வரிகளிலிருந்து மிளிர்ந்து காணப்படுகின்றது.

      படைக்கும் தொழிலைச் செய்யும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், காக்கும் தொழில் புரியும் தாமரை மலர் கண்களுடைய திருமாலும், தங்களில் சிறந்தவர் எவர் என்று நிர்மானிக்கும் பொருட்டு, சிவபெருமானது திருப்பாதத்தையும் திருமுடியையும் தொடும் விஷப்போட்டி ஒன்றில் ஈடுபட முனைந்தனர். எனினும் எவ்வளவு முயன்றும் அதில் வெற்றி காண முடியாத இருவரும், தங்கள் தவற்றை எண்ணி வருந்துய போது, அவர்களுக்கு நல்லறிவு கிட்டி உய்வு கிட்ட வழிவகை செய்தது பரம்பொருளின் திருநாமமான ‘நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். இப்புராண குறிப்பினை, திருஞானசம்பந்தர் தமது பாடலில், கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

      “பாதந் தான்முடி நேடிய பண்பராய்
      யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
      ஓதும் நாமம் நமச்சி வாயவே”

எல்லாம் வல்ல சிவபெருமானது திருவந்தெழுத்தை ஓதுவதற்கும் பேறு பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மை, இப்பதிகத்திலுள்ள பாடல் ஒன்றின் வழி அறிய முடிகின்றது.

      “கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
      வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
      விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுதுசெய்
      நஞ்சுஉள் கண்டன் நமச்சி வாயவே”

தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நஞ்சையுண்ட இறைவன் ஈசனது திருநாமமான ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் பேற்றினை, மண்டை எனும் பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் பௌத்தர்களும் கைகளையே மூலமாகக் கொண்டு பிச்சை எடுத்து அதில் உணவு புசித்து உயிர் வாழும் சமணர்களும் கொடுஞ்சொல் பேசி திரியும் சாக்கியர்களும் பெற்றிலர் என்பதை இப்பாடல் வரிகள் மிகத் தெளிவாக எடுத்துணர்த்தியுள்ளது.

      இறுதியாக,

      “நந்தி நாம நமச்சிவா யவெனும்
      சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
      சிந்தை யால்மகிழ்ந்து ஏத்தவல் லாரெலாம்
      பந்த பாசம் அறுக்கவல் லார்களே”’

என்ற இக்கடைக்காப்பில், நந்தி என்ற மற்றுமொரு பெயரைக் கொண்ட சிவபெருமானது திருவைந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்ற மந்திரத்தின் மகிமையை உணர்த்தும் வண்ணமாக, அழகிய சந்தம் கொண்டு ஆளுடை பிள்ளையாரால், ஓதப்பெற்ற இத்திருப்பதிகத்தை ஓதி வருபவர்களுக்கு எல்லையில்லா இன்பமான வீடு பேறு கிட்டும் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளாது.

      சுருங்கக்கூறின், சிவனது திருநாமமான ‘நமசிவாய’ என்ற திருவைந்தெழுத்து மந்திரம் எல்லையில்லா மகிமையைப் புரியும் ஆற்றல் கொண்டது என்பதனை திருஞானசம்பந்தர் இப்பதிகத்தில் எழுந்தருளியுள்ள பத்து பாடல்களின் வழி மிகத் தெளிவாக உணர்த்தி சென்றுள்ளார். ஆன்மாவின் இலக்கு எல்லையில்லா இன்பமான முக்தி பெறுதலே என்பதும், அதற்கு வழி வகுப்பது ‘நமசிவாய’ எனும் இத்திருவைந்தெழுத்து மந்திரமே என்பதும் இப்பதிகத்தில் மிகச் சிறப்பாக எடுத்து கூறப்பட்டுள்ளது. உலகியல் இன்பங்களையே பெரிதாக எண்ணி வாழும் மானிட பிறவியினருக்கு, ஆன்மாவின் உண்மை இலக்கு என்ன என்பதனை வலியுறுத்தி காட்டி, மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், படிப்பினையாகவும் இத்திருப்பதிகம் விளங்குகிறது என்றால், அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

முன்னர் கண்டது போல, திருஞானசம்பந்தர் தமது மற்றுமொரு திருப்பதிகத்திலும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளார். மூன்றாம் திருமுறையில், 22வது திருப்பதிகமான பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை உற்று நோக்கினோமேயானால், அதிலும் ஆளுடைப்பிள்ளையார் ஐந்தெழுத்து மந்திரத்தையே மேன்மை படுத்தி கூறியுள்ளார் என்பது மிகத் தெளிவாகப் புரிய வரும்.

      முதலாவதாக, ஈசனது திருவைந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை ஓதுபவர்கள் எமவாதை நீங்கப் பெறுவர் என்று திருஞானசம்பந்தர்,

      “வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
      றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே”

என்ற வரிகளின் மூலம் எடுத்துரைத்துள்ளார். இப்பாடலை நன்கு உற்று நோக்கினோமேயானால், மனதில் வஞ்சகமின்றி இறைவன் சிவபெருமானது திருவடியையே துதித்து வந்த மார்க்கண்டேயரது வாழ்வில் புக முயற்ச்சித்த எமனையே துரத்தியது ஈசனது திருவந்தெழுத்து மந்திரம் தான் என்ற புராணக் குறிப்பு ஒன்று புலப்படுகின்றது.

      அதுமட்டுமின்றி, வேதம் நான்கிலும் மறைகளிலும் மூல மந்திரமாக கருத்தப்படுவது திருவைந்தெழுத்து மந்திரமே என்ற செய்தியும் இத்திருப்பதிகத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றையே கற்று மூன்று வேளையும் வேதியர்கள் ஓதும் மந்திரமும் இதுவேயாகும். இதிலிருந்து மந்திரங்களுக்கெல்லாம் முதல் மந்திரமாக விளங்குவது சிவனது ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரமே என்றால் அது மிகயாகாது.

      “ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
      ஞான விளக்கினை யேற்றி நன்புலத்”

என்ற வரிகளின் மூலம் உடல், உயிர் எனப்படும் மூச்சுக் காற்று, நல்லறிவு ஆகிய அனைத்தையும் ஒருமிக்கச் செய்து தியான நிலையை அடைந்து உலக மக்களுக்கு ஞானம் கிட்ட வழி வகுப்பது ‘நமசிவாய’ எனு ஐந்தெழுத்து மந்திரத்தையன்றி வேறு ஏதுமில்லை என்று ஆளுடைப் பிள்ளையார் மொழிகின்றார்.

      அடுத்ததாக, நல்லவராயினும், தீமைகள் புரியும் பாவியரானாலும் அவர்கள் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பார்களேயானால், அவர்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டாமல், ஆன்மாவிற்குத் துன்பம் தரும் மலங்கள் நீங்கப் பெற்று முக்தி கிட்ட வழி வகுப்பது இறைவனது திருநாமமான ஐந்தெழுத்து மந்திரமின்றி வேறில்லை என்று ஆணித்தரமாக திருஞானசம்பந்தர் தமது பாடலில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், சாகும் தருவாயில் இம்மந்திரத்தை உச்சரித்தாலும் கூட எமவாதை நீங்கப் பெறும் என்றும் இவர் மொழிந்துள்ளார்.

      மேலும், காதல் கடவுளாகக் கருத்தப்படும் மன்மதனின் எய்யும் மணமிக்க மலருடைய அம்பு ஐந்தாகும்; இவ்வுலகையே தன்னகத்துள் அடக்கி வைத்துள்ள பஞ்ச பூதங்களும் மொத்தம் ஐந்தாகும்; இறைவனது திருமேனியில் அணியாக உள்ள பாம்பின் படமும் ஐந்தே; மந்திரத்தை உச்சரித்து ஜெபிப்பவர்களது கையிலுள்ள விரலும் ஐந்துதான்; இவற்றுக்கொப்பாக ஈசனது திருநாமமான ‘நமசிவாய’ எனும் மந்திரமும் ஐந்தெழுத்து சொற்களாக விளங்குகின்றன என்று ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை திருஞானசம்பந்தர் விளக்குகிறார்.

      அதைத் தவிர, தும்மலும் இருமலும் உடலை வருத்தும் போதோ, அல்லது தீவினைப் பயனாகத் துன்பம் விளையும் சமயமோ ஊழ்வினைகள் அச்சுருத்தும் போதோ இப்பிறவியில் நாம் ஓயாது உச்சரிக்கும் ஐந்தெழுத்து மந்திரம் துணை நிற்கும். இப்பிறவியில் மட்டுமின்றி, இம்மந்திரம் தொடர்ந்து வரும் பிறவிகளிலும் உறுதுணையாக விளங்கும் ஆற்றலுடையது. அத்தனை சிறப்பு வாய்ந்தது ஈசனது ஐந்தெழுத்து மந்திரம் என்று மந்திரத்தின் மகிமையை இத்திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

      “வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
      பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்”

என்ற வரிகளிலிருந்து, ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் சிவனடியார்களுக்கு வீடு பிறப்பு கெட்டு, அதாவது நிறந்தமற்ற உலகியல் இன்பங்களிலிருந்து விடுப்பு கிட்டி, நிலையான இன்பமான ‘முக்தி’ கிட்ட வகை செய்வது பரம்பொருளின் திருநாமமான ஐந்தெழுத்து மந்திரம் தான் என்று அறிய முடிகின்றது.

      அதேவேளையில், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் திருத்தொண்டர்களுக்கு, அண்டங்களையெல்லாம் அரசாளும் பேறும் தகுதியும் கிட்டுகிறது என்றும் ஆளுடைப் பிள்ளையார் குறிப்பிட்டுள்ளார்.

      சிவனது திருநாமமான ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமானது அதை தொடர்ந்து உச்சரித்த வண்ணமாகவே இருக்கும் பித்தர்களுக்கு பெருமையைச் சேர்க்கும் தன்மையுடையது ஆகும். இச்செய்தியை,

      “பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
      ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே”
என்ற வரிகளின் வழி அறிய முடிகின்றது.

      இறுதியாக,
      “ வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
      அத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே”

என்ற வரிகளின் மூலம், திருநீறு அணிந்து ஐந்தெழுத்தை உச்சரிப்பவர்களுக்கு தீவினையை விலகச் செய்யும் தன்மை ‘நமசிவாய’ மந்திரத்திற்கு உண்டு என்று அம்மந்திரத்தின் பெருமையையும் மகிமையையும் ஆளுடைப் பிள்ளையார் உலகிற்குப் பறைசாற்றியுள்ளார்.

      சுருங்கக்கூறின், சிவனது திருநாமமான ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை வெறும் வார்த்தைகளால் மட்டுமே அளவிட்டு கூறி விட முடியாது. எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் அருள் புரிய வழி வகைச் செய்யும் மந்திரம் இம்மந்திரம் என்றால் அதை மறுப்பாருமில்லை.



1 comment: