1.0 முன்னுரை
1.1 மணிமேகலை கதைச் சுருக்கம்
ஐம்பெருங்காப்பியங்களில்
ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே கருதப்பட்டு வருகின்றது. இக்காப்பியத்தில்
கதாநாயகியாக வலம் வரும் மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாவாள்.1
மணிமேகலை, இள வயதிலேயே துறவறம் பூண்டு அமுதசுரபி மூலம் மக்களின் பசியைப் போக்கும் மேன்மைச்
செயலை மேற்கொள்ளும் பாத்திரமாகவே இக்காப்பியத்தில் வலம் வருகிறாள். இக்காப்பியம் உலக
மக்களுக்குப் புத்த மதக் கோட்பாட்டினைத் தெரிவிக்கும் வண்ணம் அமைந்திருந்தாலும், இதில்
பல அறக்கருத்துகள் நம் வாழ்வுக்குத் துணை புரியும் வகையில் இடம்பெற்றுள்ளன.
1.2 பாத்திரம் பெற்ற காதை
மணிமேகலையில் 30 காதைகளில்
11 வது காதையாகப் ‘பாத்திரம் பெற்ற காதை’ இடம்பெற்றுள்ளது.2 இக்காதையில்தான்,
மணிமேகலை அள்ள அள்ள குறையாத அமுதசுரபியைப் பெற்ற நிகழ்வு இடம்பெறுகிறது. மணிமேகலை தன்
தோழி சுதமதியுடன் நந்தவனத்தில் மலர் கொய்யும் போது, அங்கு அவளைத் துரத்தி வந்த உதயகுமாரன்
எனும் இளவரசனிடமிருந்து தப்பும் பொருட்டு ஒரு பளிங்கு அறையில் புகுந்தாள். அங்கிருந்து
அவள் மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டாள். அத்தீவில்
இருந்த புத்த பீடிகையை வணங்கி பழம் பிறப்பை அறிகிறாள். பின்பு அங்குத் தோன்றிய தீவதிலகையிடம்
தன்னைப் பற்றி கூறி, முன்னொரு காலத்தில் ஆபுத்திரனால் கைவிடப்பட்ட அமுதசுரபியைப் பெறுகிறாள்.
அதன் பின் தீவதிலகை அவளுக்கு அறங்கள் சிலவற்றை உரைக்கிறாள்.
2.0 பாத்திரம் பெற்ற காதை
சுட்டும் இன்றைய வாழ்வோடு தொடர்புடைய அறக்கருத்துகள் :
2.1அன்னமிடுதலின் மேன்மை
தானங்களில்
சிறந்த உயரிய தானமாகக் கருதப்படுவது அன்னதானம்3 என்று கூறினால் மறுப்பாரில்லை.
உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதே அன்னதானத்தின் சிறப்பம்சமாகும். இது, சிறந்த
மனிதப் பண்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.4 இவ்வாறு அன்னமிடுதலின்
மேன்மையைப் பற்றி மணிமேகலையில், பாத்திரம் பெற்ற காதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்
கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்
தோரே 5
என்ற வரிகளின் வழி, பசித்தோருக்கு உணவிடுதல், உயிரையே கொடையாக
அளித்ததற்குச் சமமாகக் கருதப்படும் என்று கூறப்படுகின்றது.6 இறைவனுக்கடுத்து
உலகில் உயிர்கள் பசித்திருக்கும் வேளையிலும் தக்க தருணத்தில் உணவளிப்போரே நமக்கு உயிர்
கொடுத்தவர்களாகின்றனர் என்பது இவ்வரிகளின் வழி தெளிவாக அறிய முடிகின்றது.7
பசி என்பது ஒரு நோயாகவே
கருதப்படுகின்றது. இப்பசியானது ஒருவரது சிறப்பை அழிக்கவல்லது. இதைத்தான் மணிமேகலையில்,
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங்
கொல்லும்
பிடித்த கல்வி பெரும்புனை
விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை
நிறுத்தும் 8
என்று சீத்தலை சாத்தனார் எடுத்தியம்பியுள்ளார். அதாவது பசி
மனிதன் ஒருவனை ஆட்கொள்ளும் போது, அம்மனிதன் தன்னை மறக்கிறான்; தன் சுற்றுப்புறத்தை
மறக்கிறான். அவன் கற்ற கல்வி அந்நேரத்தில் பயன்படாமல் மனிதனுக்குரிய நாணப் பண்புகளைக்
கைவிட்டு பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டான்.9 அவ்வாறான கொடுமைகளை இன்றும்
நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நகர்ப்புறங்களில், கைகளில் குழந்தையுடனும், வயோதிகர்களும்
பசிக்கொடுமயினால் பொது இடங்களில் பிச்சை எடுத்த வண்ணமாகத் தான் உள்ளனர். நிலைமை இவ்வாறு
இருக்க வெறும் கோயில்களிலும் விழாக்களிலும் வழங்கப்படும் அன்னதானமானது இந்நிலை சீர்
அடைய பெரிதும் உதவாது என்றே கூறலாம்.
அதே வேளையில், மக்களது பசிப்பிணியைப்
போக்குபவர்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று தீவதிலகை,
பசிப்பிணி யென்னும் பாவியது
தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக் கொன்நா
நிமிராது 10
என்ற வரிகளின் வழி இக்காதையில் மணிமேகலையிடம் கூறுகிறாள்.
இவ்வாறு சோற்றுக்கொடையின்
சிறப்பும் அக்கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன.11
எனினும், பசிப்பிணியைப்
போக்கும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு அன்னமிடுதலே அறச்செயலாகக் கருதப்படுகின்றது. ஏனையவர்களுக்கு
உணவிடுதல் அந்த அறச்செயலையே விலை கூறுவது போல் கருதப்படும்.12
இதையே, சாத்தனார் பெருமான்,
ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை
பகர்வோர்
ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்
மேற்றே யுலகின் மெய்நெறி
வாழ்க்கை 13
என்று எடுத்தியம்பியுள்ளார். அதையே திருவள்ளுவரும்,
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீ துடைத்து 14
அதாவது, இல்லாதவர்களுக்கு
வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து
வழங்கப்படுவதாகும்.15 எனவே, பசியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து நல்லலறத்தை
மேற்கொள்ளும் கடமை நாம் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு செய்யப்படும் அறமானது, இப்பூவுலகில்
நிலைத்து நிற்கும் தன்மையுடையது.
2.2 அன்பின் மேன்மை
2.2.1 உயிர்களிடத்தில் அன்பு
செலுத்துதல்
அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு
தொடர்பான ஒர் உணர்வும் அனுபவமும் ஆகும்.16
ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை
போன்றே
நெஞ்சு வழிப்படூ 17
என்ற வரிகளின் வழி, ஈன்ற குழந்தையின் முகம் கண்டு, பெற்ற
தாய்க்குப் பால் சுரப்பதைப் போல், பசியால் வாடி, அயர்ந்து, சோர்ந்திருக்கும் வரியோர்களைக்
கண்டவுடன் அன்பால் கிரங்கி இப்பாத்திரம் அமுதத்தைச் சுரக்கும் என மணிமேகலை தீவதிலகையிடம்
கூறுகிறாள். இங்கு உயிர்கள் பால் மணிமேகலை கொண்டிருக்கும் அன்பு மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது.
உயிர்களிடத்தில் செலுத்தப்படும் அன்பானது தெய்வத்திற்குச் சமம் என்பதை ‘அன்பு என்பது
தெய்வமானது’ என்ற முன்னோர்களின் கூற்று புலப்படுத்துகிறது. மனிதர்கள் சக மனிதர்களிடம்
அன்பு செலுத்துதல் புனிதமான செயலாகும்.
2.2.2 தாய் மகள் மீது கொண்ட அன்பு
வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்த தென்மகள் வாராள்
வழுவாய் உண்டென மயங்கி 18
என்ற வரிகளின் வழி மாதவியின் கலக்கத்தைச் சாத்தனார் பெருமான்
படம் பிடித்து காட்டுகின்றார். தெய்வம் கெடு கொடுத்த ஏழு நாட்கள் முடிவடைந்த பின்னும்
தன் மகள் இன்னும் இல்லம் திரும்பவில்லையே என்று
மணிமேகலையின் தாய் மாதவியும் செவிலித் தாய் சுதமதியும் கலங்கி வருந்தி காத்திருப்பதாக
இப்பாடல் வரிகள் அமையப் பெற்றுள்ளன.19 இது மகள் மீது தாய் கொண்டிருக்கும்
அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றது.
இன்றைய பரபரப்பு மிகுந்த
வாழ்க்கைச் சூழலில், மக்கள் அன்பிற்குக் கொடுத்து வரும் முக்கியத்துவம் நாளுக்கு நாள்
குறைந்து கொண்டே வருகிறது. ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி எந்நேரமும் பொருளீட்டுவதிலேயே
குறிக்கோளாக இருக்கும் மக்கள் வாழ்வில், அன்பு இன்று வெறும் சொல்லாகவே இருந்து வருகிறது.
குடும்ப அமைப்பில் இந்த அன்பு சரியான முறையில் வெளிகாட்டப்படாததால், குடும்பங்களில்
அமைதி காணப்படுவதில்லை.
உலக அரங்கிலோ, அன்பின்மை
காரணமாக, வன்முறைச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக அரங்கில் போர்கள் பல நடந்த
வண்ணமாகவே உள்ளன. சமயங்கள் அனைத்தும் உயிர்களிடத்தில் அன்புடைமையை வலியுறுத்தினாலும்,
உலகில் வன்முறைச் சம்பவங்கள் அதிமாகவே காணப்படுகின்றன. இதிலிருந்து, உயிர்களிடத்து
அன்பு செலுத்தும் பண்பு மக்களிடையே குறைந்து வருகிறது என்று தெள்ள தெளிவாகப் புரிகிறது.
2.3
மூத்தோரை மதித்தல்
2.3.1 பெற்றோரை மதித்தல்
இக்காதையில் மணிமேகலை ஏழு
நாட்கள் கழித்து, தீவதிலகையிடம் இருந்து விடைபெற்று
தன் தாயையும் செவிலித் தாயையும் சந்தித்து அவர்களது பழம்பிறப்பை விளக்கி கூறி பின்
அவர்களது காலில் விழுந்து வணங்குமாறு பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துர்கத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்
தவ்வைய ராகிய தாரையும் வீரையும்
அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன் 20
பெரியோரின் ஆசி பெறுதல்
இன்னும் சமூகத்தில் ஒர் வழக்கமாகவே இருந்து வருகிறது. விழாக்களிலும் பண்டிகைகளிலும்
நம்மவர்கள் இன்னும் வீட்டின் உள்ள பெரியோர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதைக் கண்கூடாகக்
காண இயலும்.
2.3.2 குருவைப் போற்றுதல்
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத்
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
பழுதறு மாதவன் பாதம் படர்கேம்
எழுகென வெழுந்தனர் இளங்கொடி தானென் 21
மணிமேகலையின் கையில் இருந்த
அமுத சுரபியை மாதவியும் சுதமதியும் வணங்கிய பின், குற்றமற்ற பெருந்தவம் உடைய அறவண அடிகளது
பாதங்களை வணங்கச் செல்வோம் வாரீர் என மணிமேகலை மாதவியையும் சுதமதியையும் அழைத்துக்
கொண்டுச் செல்கிறாள்.22 இங்கு இம்மூவரும் தங்களுக்குக் குருவாகச் செயல்பட்டு
வந்த அறவண அடிகளைப் பெரிதும் மதித்து வந்தனர் என்பது நன்கு புலப்படுகிறது.
இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள்
நம் ஆசிரியர்களே. குருவருளால் தான் திருவருள், அதாவது இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.
இக்காதையில் அறவண அடிகள்
மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகியோருக்குக் குருவாக
வலம் வருகிறார். அவரே இவர்களுக்குப் பௌத்த சமயத்தைப் போதித்து அற நெறியில் நிற்க வகை
செய்கிறார். இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகிய மூவரும் இறைவனிடம் நெருங்க உற்ற துணையாக
இருந்துள்ளார்.
இதிலிருந்து, நாம் வாழ்வில்
ஒன்றைக் கற்றுக் கொள்ளவும், இறைவனை நெருங்கவும் குருவருள் மிகவும் அவசியமாகும். இன்றும்
நம் வாழ்வில் குருவைப் போற்றும் பண்பு இருந்து கொண்டு தான் வருகின்றது. ஆங்காங்கே,
பல குருமார்களின் ஆசிரமங்கள் வழிபாட்டுக்கு உரியவையாக இருந்து வருகின்றன.
எனினும், இந்நிலை போலி குருக்கள்
உருவாவதற்கும் காரணியாக அமைந்து விட்டது. இப்பொழுது எங்கும் நேற்று பெய்த மழையில் பூத்த
காளான்களைப் போல் பலர் சரியான தகுதிப்பாடு இல்லை எனினும் தங்களைக் குரு என்று அடையாளப்படுத்தி
கொள்கின்றனர். இவர்களில் பலர் பணம் தேடும் நோக்கத்திற்காகவே இவ்வாறு செயல்படுகின்றனர்.
உண்மையை அறியாத மக்களும் இது போன்ற ’குருக்களை’ நம்பி வழிபட்டு பணத்தையும் பொருளையும்
இழந்த கதைகள் பல உண்டு. இன்றும் தமிழகத்தில் பல போலி குருக்கள் காவல் துறையினரினால்
கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆகவே, இது போன்ற விஷயங்களில் நம்மவர் இன்னும் விழிப்பாகச்
செயல்படுவது மிகவும் அவசியம்.
2.4 மனித வாழ்வில் இறை நம்பிக்கை
மணிமேகலை முழுக்க முழுக்க
பௌத்த சமய காப்பியமாகும். இக்காப்பியத்தில் புத்தர் பெருமான் தெய்வமாகக் கருதி வணங்கப்பட்டுள்ளார்.
இக்காப்பியத்தில் எங்கு திரும்பினாலும் பௌத்த சமய மேன்மையே மேலோங்கி நிற்பதைக் காண
முடிகின்றது.
போதி நீழற் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவைகெட ஏத்தித்
தீவ திலகை சேயிழைக் குரைக்கும் 23
போதி மரத்தின் கீழ் வீற்றிருக்கும் குற்றமற்ற புத்தர் பெருமானை வணங்கி, குற்றங்கள்
நீங்குமாறு போற்றி தீவதிலகை மணிமேகலைக்கு அறங்கள் உரைக்கத் தொடங்குவதாக இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.
இங்கு புத்தர் தெய்வமாக
வணங்கப்படுகின்றார். அறங்கள் கூறுமுன் இறைவனை வழிப்பட்டது, மணிமேகலையிடம் உள்ள இறை
நம்பிக்கையைப் படம் பிடித்து காட்டுகின்றது.
இறைநம்பிக்கை, ஒவ்வொரு மனிதனும்
வாழ்வில் வழி தவறாமல் சரியான பாதையில் நடக்க உற்ற துணை புரிகிறது. மனித வாழ்விற்கு
இறைநம்பிக்கை ஒரு தண்டவாளத்தைப் போன்றது என்றால் மறுப்பாரில்லை.
உண்மையான இறைநம்பிக்கை நற்செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது.
நம் நாட்டில் இறைநம்பிக்கை
மக்களிடையே மிகவும் ஆழமாகப் பதிய நம் நாட்டின் ’இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்’ என்ற
முதல் தேசிய கோட்பாடே வழிவகுக்கின்றது. அதாவது, எந்தச் சமயமாக இருந்தாலும் அந்தந்த
சமய வழிபாட்டிற்கு ஏற்ப தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது நாட்டின்
கோட்பாடாக அமைந்திருப்பது இறைநம்பிக்கையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றது.
இக்காதையில் வேறொரு சூழ்நிலையிலும்
இறைவன் மீது கொண்ட பக்தி வெளிப்படுகிறது.
தீவ திலகை தன்னடி வணங்கி
மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு 24
இங்கு, மணிமேகலை தீவதிலகையிடமிருந்து
விடைபெற்று தன் ஊருக்குச் செல்லும் முன், தீவதிலகையை வணங்கி புத்த பெருமானது பீடிகையை
வலம் வந்து தொழுத பின்னே மீண்டும் வான் வழியே தன் ஊருக்குப் புறப்படுகிறாள்.25
இங்கு
மீண்டும் புத்தரை வழிபடுவது போல் இந்த காட்சி அமைகின்றது. இது, மணிமேகலை புத்தர் மீது
கொண்டிருக்கும் இறைநம்பிக்கையை நமக்குப் படம் பிடித்து காட்டுகின்றது.
2.5 வினைக் கோட்பாடு
இக்காதையில் மனித வாழ்வில்
வினைக் கோட்பாட்டின் செயல்பாடு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியச் சமயங்கள் யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த
சமயமும் இதற்கு விதிவிலக்கன்று.
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து 26
இந்த வரிகளில், நாவலந்தீவு
எனும் பெரிய தீவில் நல்லறத்தை மேற்கொண்டதால், அதன் விளைவாக செல்வத்தை அனுபவிப்பவர்கள்
வீடுகளில் மக்கள் பிச்சை எடுக்கின்றனர்27 என்று சீத்தலை சாத்தனார் கூறியுள்ளார்.
அதாவது, நல்ல வினைகளைச் செய்தவர்களுக்கு வசதியான வாழ்க்கை கிட்டியுள்ளதை நாம் இங்கு
காண இயலுகிறது.
வினைகள் இருவகைப்படும். அவை நல்வினை,
தீவினை என்பனவாகும். உயிர்கள் நல்வினை, தீவினை என்னும் இருவினைப் பயனால் தத்தமக்குரிய
பிறவி எடுத்து, தம் வினைகள் பயனைத் தரும் காலத்தில் தாம் செய்த வினைக்கு
ஏற்ப இன்பமும் துன்பமும் அடைகின்றன. அதாவது, பழம் பிறப்பில் நல்லறம் செய்தவர்கள் அதற்கு அடுத்த பிறவிகளிலும் அதன்
பயனைத் தொடர்ந்து அனுபவிப்பர் எனவும், நாம் செய்த தீவினைகளும் நம்மை அடுத்தடுத்த பிறப்புகளில்
துரத்தும் எனவும் இவ்வரிகளின் வழி அறிய முடிகிறது. நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன்
தினை அறுப்பான்’ என்ற பழமொழி
இக்காதையில் கூறப்பட்டுள்ள வினைக் கோட்பாட்டிற்கு நன்கு பொருந்தும்.
ஒருவன் எதை விதைக்கிறானோ அதுவே விளையும். அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு
நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம்
உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும். சுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி வந்தே தீரும். அதே போல், ஓவ்வொரு மனிதனும் இப்பூதவுடல் எய்தி உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினைப் பயன்கள் மட்டுமே.
2.6மறுபிறப்புத் தத்துவம்
தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப உயிர்களுக்கு
மறுபிறவி உண்டு28 என்ற கோட்பாட்டில் பௌத்த சமயத்திற்கு ஆழமான நம்பிக்கையுண்டு.
அதாவது, நாம் நிச்சயமாக,
முற்பிறப்பின் பலாபலன்களை அடுத்தடுத்த பிறப்புகளில் அடைவோம் என்ற செய்தி இக்காதையில் இடம்பெற்றுள்ளது.
விட்ட பிறப்பில்யான் விரும்பிய
காதலன்
திட்டி விடமுணச் செல்லுயிர்
போவுழி
உயிரோடு வேவே னுணர்வொழி
காலத்து
வெயில்விளங் கமையத்து விளங்கித்
தோன்றிய
சாது சக்கரன் றனையா னூட்டிய
காலம் போல்வதோர் கனாமயக்
குற்றேன்
ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிப் பாத்திரம் என்கைப்
புகுந்தது 29
மணிமேகலை முற்பிறப்பில்
தன் கணவன் ராகுலன் அரவம் தீண்டி மாண்டு போக, அவனுடன் சேர்ந்து தானும் தீயில் குதித்து
மாண்டாள். அத்தீயில் தம் உணர்வு அடங்கும் வேளையில் அவள் முன்னொரு சமயத்தில் சாதுசக்கரன்
என்ற முனிவருக்கு உணவளித்தது அவளுக்குக் கனவு போல் தோன்றியது. அந்த நினைவுடனேயே மணிமேகலை
மாண்டாள்.30
அதன் விளைவாகவே,
இப்பிறப்பில் அமுதசுரபி எனும் பாத்திரம்
அவள் கைக்கு வந்ததாக மணிமேகலை தீவதிலகையிடம் கூறுவது போல் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.31
அதே வேளையில், முற்பிறப்பில்
செய்த தீவினையால் இப்பிறப்பில் துன்பப்படுவோரையும் இக்காதையில் சாத்தனார் பெருமான்
குறிப்பிட்டுள்ளார்.
துய்ப்போர் தம்மனைத் துணிச்சித
ருடுத்து
வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயெலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லா தயர்வோர் பலரால் 32
இந்த வரிகளின் வழி, முற்பிறப்பில்
செய்த தீவினையின் பயனாக, மக்கள் கிழிந்த கந்தல் ஆடைகளை அணிந்து, கடும் பசியால் அதிக
துன்பப்பட்டு, வெயில் என்று வெறுப்படையாமலும், மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் செல்வந்தர்கள்
வீட்டு வாயிலில் பிச்சை எடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அறிய வருகிறது.33
2.7 வீடுபேறு அடைதலே நிலையான இன்பம்
உலக வாழ்வு நிலையற்றது.34
தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி. அதுவே மோட்சம்; அதுவே வீடுபேறு; அதுவே ஆன்ம விடுதலை. கர்ம கொள்கைப்படி, ஒருவன் செயலுக்கு ஏற்ப ஒரு பலன் உண்டு. கர்மாவின் பலனை அது நல்லதோ, கெட்டதோ அழித்தால் தான் உயிர், வீடு பேற்றினை அடைய முடியும். முற்பிறப்பினை உணர்ந்தவர்களுக்குத் தருமபதம் உரியது என்பது புத்த சமயக் கொள்கையாகும்.
இதனை இக்காப்பியம்,
தரும தலைவன்
தலைமையின் உரைத்த
பெருமை சால்
நல்லறம் பிறழா நேன்பினர்
கண்டு கைதொழுவோர்
கண்ட தற்பின்னர்
பண்டைப் பிறவியர்
ஆகுவர் பைந்தொடி
உரிய துலகத்
தொரு தலையாக 35
என எடுத்துரைக்கின்றது. இவ்வகையில் புத்தசமயத்தின் தலையாய
கொள்கையினை விளக்கம் செய்யவும் இம்முற்பிறப்புச் செய்தியினை ஆசிரியர் உத்தியாகக் கொள்கின்றார்.36
வாய்வ தாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய்தவம் 37
என்ற வரிகளின் வழி, ’மனித உடலால்
செய்யப்படும் பாவங்களைப் போக்குவதற்காகக் கிடைக்கப்பெறும் தவம் கிட்ட’ என்று மணிமேகலை
தன் தாயிடமும் செவிலித் தாயிடமும் கூறுகிறாள். இவ்வரிகளில், மனிதவுடலால் செய்யப்படும்
பாவங்கள் முக்திக்குத் தடையாக அமையும் என்ற கருத்து புதைந்துள்ளது. அதாவது ஆன்மா இறைவனடி
சேர உடலால் செய்யப்பட்ட பாவங்களை நீக்குவது அவசியமாகும். இவ்வாறு குற்றம் குறைகள் நீங்கிய
மாசற்ற உடலின் ஆன்மா உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு எல்லையில்லா இன்பமான வீடு பேற்றை
அடைகின்றது.
இதுவே பகவத் கீதையில்,
எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.
எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.
என்று கூறப்படுகின்றது. இவ்வுலகில் நமக்குச் சொந்தமானதென்று
எதுவுமில்லை என்பதை இக்கீதைச் சாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதிலிருந்து, ஓர் ஆன்மாவின்
நிலையான இன்பம் அந்த ஆன்மா முக்தி அடைவதில் தான் உண்டு என்ற உண்மை புரிகிறது.
3.0 முடிவுரை :
சுருங்கக்கூறின், உலகிலேயே
மிகவும் கொடுமையான ஒன்று பசிப்பிணி என்று கூறினால் அதை மறுப்பாரில்லை. மானிட வாழ்வின்
மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான். ஔவையார் பசிப்பிணியின்
கொடுமையை இப்படிச் சொல்கிறார்.
மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளான்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும் 38
மணிமேகலைக் காப்பியத்தில்
இடம்பெற்றுள்ள பாத்திரம் பெற்ற காதையில், பசிப்பிணியின் கொடுமைகள் தெளிவாக விளக்கப்பட்டதோடு,
அப்பிணியைப் போக்கும் செயல் மேன்மையானது என்றும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. அதே
வேளையில், இக்காதையில் பல அறக்கருத்துகள் இன்றைய
வாழ்க்கை முறையோடு நெருங்கிய தொடர்பு உள்ளதைக் காண இயலுகிறது. மணிமேகலை வெறும் காலத்தால்
அழியாத காப்பியமாகத் திகழாமல், இக்காப்பியத்தில் போதிக்கப்பட்டுள்ள அறக்கருத்துகள்
இன்றும் நாம் அனைவராலும் பின்பற்றக் கூடியதாகவே உள்ளன.
இறுதிக்குறிப்புகள்
1.
துரைசாமிப் பிள்ளை, சு. 1942. முப்பெருங் காவியங்களில் ஒன்றான மணிமேகலை ஆராய்ச்சி. சென்னை : தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ப. 2.
2.
சிதம்பரனார், சாமி. 1963. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை : ஸ்டார் பிரசுரம், ப. 14.
3.
சிதம்பரனார், சாமி. 1963. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை : ஸ்டார் பிரசுரம், ப. 74.
5.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 23-24
6.
சீனிவாசன், ரா. 1997. மணிமேகலை மூலமும் திறனாய்வும். சென்னை : அணியகம் பதிப்பகம், ப. 26.
7.
யோகேஸ்வரி, வ. 2007/2008. மணிமேகலையில் வெளிப்படும் வாழ்வியல் கூறுகள் : ஒர் ஆய்வு (இளங்கலை பட்டப்படிப்பிற்காக
மேற்கொள்ளப்பட்ட ஆய்வேடு). கோலாலம்பூர் : இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்,
ப.131.
8.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 4-7
9.
சுத்தானந்த பாரதியார். 1959. மணிமேகலை அமுதம். காரைக்குடி : செல்வி பதிப்பகம், ப. 78.
10.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 8-9
11. மாணிக்கம், வ. சுப. இரட்டைக் காப்பியங்கள். காரைக்குடி : செல்வி பதிப்பகம்,
ப. 64.
12. சுத்தானந்த பாரதியார். 1959. மணிமேகலை
அமுதம். காரைக்குடி : செல்வி பதிப்பகம், ப. 79.
13.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 20-23
14. குறள் : 221
15. கருணாநிதி, மு. 1997. திருக்குறள் கலைஞர் உரை. சென்னை : திருமகள் நிலையம், ப.
45.
17.
மணிமேகலை: 11. பாத்திரம் பெற்ற காதை: 42-44
18.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 56-58
19. சுத்தானந்த பாரதியார். 1959. மணிமேகலை
அமுதம். காரைக்குடி : செல்வி பதிப்பகம், ப. 80.
20. மணிமேகலை:
11. பாத்திரம்
பெற்ற காதை: 61-65
21. மணிமேகலை:
11. பாத்திரம்
பெற்ற காதை: 72-75
22.
சுத்தானந்த பாரதியார். 1959. மணிமேகலை அமுதம். காரைக்குடி : செல்வி பதிப்பகம், ப. 81.
23.
மணிமேகலை: 11. பாத்திரம் பெற்ற காதை: 1-3
24.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 52-54
25. சாமிநாதையர், உ.வே. 1956. கடைச் சங்கப்புலவருள்
ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் அருளிச் செய்த மணிமேகலை. சென்னை:
கபீர் அச்சுக்கூடம், ப. 131.
26. மணிமேகலை:
11. பாத்திரம்
பெற்ற காதை: 35-37
27. சுத்தானந்த பாரதியார். 1959. மணிமேகலை
அமுதம். காரைக்குடி : செல்வி பதிப்பகம், ப. 79.
28.
சிதம்பரனார், சாமி. 1963. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை : ஸ்டார் பிரசுரம், ப. 121.
29.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 27-34
30.
14. சிதம்பரனார், சாமி. 1963. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை : ஸ்டார் பிரசுரம், பக். 82-83.
31. சீனிவாசன், ரா. 1997. மணிமேகலை மூலமும்
திறனாய்வும். சென்னை : அணியகம் பதிப்பகம், ப. 26.
32. மணிமேகலை:
11. பாத்திரம்
பெற்ற காதை: 37-41
33.
சிதம்பரனார், சாமி. 1963. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை : ஸ்டார் பிரசுரம், ப. 66.
34.
சிதம்பரனார், சாமி. 1963. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை : ஸ்டார் பிரசுரம், ப. 66.
35.
மணிமேகலை: 11. பாத்திரம்
பெற்ற காதை: 30-35
36. தமிழ்த்துறை ஆசிரியர்கள். 1979. மணிமேகலைச்
சிந்தனைகள். சென்னை : அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ப. 174.
37. மணிமேகலை:
11. பாத்திரம்
பெற்ற காதை: 68-69
துணைநூற்பட்டியல்
கருணாநிதி, மு. 1997. திருக்குறள் கலைஞர் உரை. சென்னை : திருமகள் நிலையம்.
சாமிநாதையர், உ.வே. 1956. கடைச் சங்கப்புலவருள் ஒருவராகிய
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் அருளிச் செய்த மணிமேகலை. சென்னை: கபீர்
அச்சுக்கூடம்.
அச்சுக்கூடம்.
சிதம்பரனார்,
சாமி. 1963. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை : ஸ்டார் பிரசுரம்.
சீனிவாசன்,
ரா. 1997. மணிமேகலை மூலமும் திறனாய்வும். சென்னை : அணியகம்
பதிப்பகம்.
பதிப்பகம்.
சுத்தானந்த பாரதியார். 1959. மணிமேகலை அமுதம். காரைக்குடி
: செல்வி பதிப்பகம்.
தமிழ்த்துறை
ஆசிரியர்கள். 1979. மணிமேகலைச் சிந்தனைகள். சென்னை:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
துரைசாமிப்
பிள்ளை, சு. 1942. முப்பெருங் காவியங்களில் ஒன்றான மணிமேகலை ஆராய்ச்சி. சென்னை : தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
மாணிக்கம், வ. சுப. இரட்டைக் காப்பியங்கள். காரைக்குடி
: செல்வி பதிப்பகம்.
யோகேஸ்வரி, வ. 2007/2008. மணிமேகலையில் வெளிப்படும்
வாழ்வியல் கூறுகள் : ஒர் ஆய்வு (இளங்கலை பட்டப்படிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வேடு). கோலாலம்பூர் : இந்திய ஆய்வியல் துறை, மலாயாப்
பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment