1.0 முன்னுரை
1.1 புறநானூறு
சங்க இலக்கியங்களைப் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை ஆகியவற்றின் கீழ் அடக்க
இயலும். இவற்றில் எட்டுத்தொகை நூல்களில் புறநானூறும் ஒன்றாகும். இத்தொகை நூல் நானூறு
பாடல்களை உள்ளடக்கியதாகும். வீரம், கொடை, புகழ்
முதலிய வாழ்க்கைத் துறைகளை உள்ளடக்கியே இப்பாடல்கள் அமைந்துள்ளன.
புறநானூற்றில், மன்னர்கள், வள்ளல்கள், குறுநில மன்னர்கள் போன்றோரது புறச்செயல்களைப்
புகழ்ந்தே புலவர்கள் பாடல்களை இயற்றினர். இப்புலவர்கள் பல்வேறு காலங்களில் தோன்றியவர்களாகவும்,
பல்வகையான சமூக பின்னனியைக் கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். இப்புலவர்களில் சிலர்
அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றனர். பெண் புலவர்களும் புறநானூற்றில்
பாடல்களை இயற்றியுள்ளனர். (வித்துவான் ஜி. சுப்பிரமணிய
பிள்ளை. 1944. புறநானூறும் புலவரும்)
இப்பாடல்கள் நூற்று நாற்பத்தேழுக்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்பட்டவை என அறிய
வருகிறது. இதில் பலரது இயற்பெயரை அறிய முடியவில்லை. அதனால், சில புலவர்கள் பாடல் வரிகளில்
இடம்பெற்றிருக்கும் ஊர்களின் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றனர். மேலும் சிலர்
தொழிலாலும், மரபாலும், பல்வேறு காரணப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டுள்ளனர். (வித்துவான் ஜி. சுப்பிரமணிய பிள்ளை. 1944. புறநானூறும்
புலவரும்)
1.2 மோசிகீரனார்
மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது தொண்டை நாட்டில்
உள்ள மோசூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம்
எனக் கருதப்படுகிறது. மோசிகொற்றனார் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. (டாக்டர் உ.வே. சாமிநாதையர். 1956. எட்டுத்தொகையுள் எடாவதாகிய புறநானூறு
மூலமும் உரையும்) இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் கீரன் குடியைச் சேர்ந்தவராயிருத்தல் கூடும் என்ற
கருத்தும் உள்ளது. சேர மன்னனான தகடூர் எறிந்த இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். (http://ta.wikipedia.org/wiki/மோசிகீரனார்)
1.3
கொண்கானங் கிழான்
கொண்கானம், மைசூர் நாட்டின் தென்பகுதியையும், சேலம், கோவை மாவட்டங்களையும் கொண்டு
திகழ்ந்த ஒரு நாடாகும். இந்த இடமே பின்னர் கொங்கணம் என அழைக்கப்பட்டது. அதே வேளையில்,
கொண்கானம் எனும் பெயருடைய மலையும் இந்த இடத்தில் அமையப்பெற்றதாலும் இந்நாட்டிற்கு கொண்கானம்
என்ற பெயர் அமைந்திருக்கக் கூடும் என்பது வேறு சிலரது கருத்தாகும்.
இயற்கை அன்னை தன் பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடிய இடங்களில் கொண்கானம் நாடும் ஒன்று
என்றால் அதை மறுப்பதற்கில்லை. இந்நாடு பொன்வளம் நிறைந்த நாடு என்பதை புலவர்கள் பலர்
சங்க இலக்கிய பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நாட்டை கொடையும் கொற்றமும் மிக்க தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனையே மக்கள்
கொண்கானங் கிழான் என்று அழைத்து வந்தனர். இக்கொண்கானங் கிழானது கொடைத் திறத்தையும்
வீரத்தையும் அந்நாட்டின் இயற்கை வளத்தையும் புலவர் மோசிகீரனார் பலவாகப் புகழ்ந்து புறநானூற்றில்
பாடியுள்ளார்.
கொண்கானங் கிழான் இயற்கையாகவே
பெருஞ்செல்வத் தோன்றல் இல்லாதவனாயினும் தன்பால் நாடிவரும் பரிசிலர்க்கு இயன்றவற்றை நல்கி இன்புறுத்தும் ஈகை குணம்
கொண்டவன். ஈகைக்கேற்ற தாளாண்மையும் அதன் சிறப்புக் காக்கும் தோளாண்மையும் இவன்பால்
அதிகம் இருந்தமையால் புலவர் இவனைப் பாடிப் பாராட்டினார். (கா.கோவிந்தன். 1995. சங்ககால அரசர் வரிசை)
1.4 கொடைத் திறம்
கொடை என்பது ஈகை பண்பைக் குறிப்பதாகும். இரக்க குணத்துடன் வரியோருக்கு அவர்களது
துன்பத்தைப் போக்கும் வண்ணம் பணமாகவோ பொருளாகவோ உதவுதலே கொடை எனப்படுகிறது. எத்தகைய
பலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவியே அறமாகும். ஆனால், விளம்பரத்திற்காகவும் சுயநல
நோக்குடனும் செய்யப்படும் உதவிகள் கொடைகளில் அடங்காது. தனது விருப்பு வெறுப்புக்கு
அப்பாற்பட்டு, தம்மிடம் உள்ளதை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுப்பதே கொடை நெஞ்சர்களின்
இயல்பு.
கொடை நெஞ்சர்கள் என்பவர்கள் ஒரு கணம் கூட சிந்தனைக்கு
உட்படுத்தாமல் உள்ளத்தால் மகிழ்ச்சியுடன் கொடுப்பவர்களாவர். ஒரு சிறந்த கொடையாளி என்பவன்
சிந்தித்துக் கொடுப்பவனும் அல்ல கொடுத்த பின் சிந்திப்பவனும் அல்ல. இந்த உயர்ந்த
தன்மை என்பது ஒரு சிலருக்கே அமையும். அதிலும் சங்க கால மன்னர்களில் பலர் கொடை நெஞ்சர்களாக
வலம் வந்துள்ளனர் என்பதை புறநானுற்று பாடல்களின் வழி அறிய முடிகின்றது. அவ்வாறு தனது
கொடைத் திறத்திற்குப் பெயர் போன தலைவனாகவே கொண்கானங் கிழான் என்பவனும் புறநானுற்றில்
வலம் வருகின்றான். கொண்கானங் கிழானது கொடைத் திறத்தைப் புகழ்ந்தே புலவர் மோசிகீரனார்
புறநானுற்றில் மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களது எண்ணிக்கை
முறையே 154, 155 மற்றும் 156 ஆகும்.
1.5 புறநானூற்று பாடல்கள்
(பாடல் எண் : 154, 155, 156)
இம்மூன்று பாடல்களும் புலவர் மோசிகீரனார் கொண்கானங் கிழானை
நோக்கி பாடிய பாடல்களாக அமையபெற்றுள்ளன.
இதில் 154வது எண் கொண்ட பாடல் இரத்தல் அரிது பாடல் எளிது என்ற தலைப்பைக் கொண்டது. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற பெருமன்னர்களைப்
பாடி, புகழும் பரிசிலும் பெற்ற புலவர் மோசிகீரனார் தன்னிடம் வந்து தன் ஈகையைப் புகழ்வதைக்
கண்டு கொண்கானங் கிழான் வியந்தான். மோசிகீரனார் தகுதிக்கேற்ப தான் அவருக்கு என்ன பரிசில்
அளிக்க முடியும் என்று எண்ணினான். அவன் எண்ணியதை உணர்ந்த மோசிகீரனார் இந்த பாடலைக்
கூறினார். இது பாடாண் திணையில் பரிசில் துறையில் பாடப்பட்ட பாடலாகும். இத்திணையில்,
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகள் சிறப்பித்துக் கூறப்படும்.
புரவலர் முன் இரவலர், தாம் பெற விரும்பிய பொருளைக் கூறுவதே பரிசில் துறையாகும்.
அடுத்ததாக, 155வது எண் கொண்ட பாடல் ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி என்ற தலைப்பைக் கொண்டது. இப்பாடல் பாடாண் திணையில் பாணாற்று படை
துறையில் பாடப்பட்ட பாடலாகும். கொண்கானங் கிழானிடம் பரிசில் பெற்று மகிழ்ச்சியுற்ற மோசிகீரனார் ஒரு பாணனைக்
கொண்கானங் கிழானிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பரிசு பெற்ற பாணன்,
பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியில் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துவதே
இத்துறையாகும்
இறுதியாக, 156வது எண் கொண்ட பாடல் பாடாண்
திணையில் இயன்மொழி துறையில் பாடப்பட்ட பாடலாகும். இத்துறைப் பாடல்கள் பாட்டுடைத் தலைவனின் இயல்புகளைக் கூறுகின்றன. கொண்கானங்
கிழானது விருந்தை உண்டு மகிழ்ந்திருந்த மோசிகீரனார் அவனது கொண்கான மலையைக் கண்டு பாட
விரும்பினார். கொண்கானங் கிழான் நாட்டுக்கு இரண்டு வளங்களான இரவலர்க்கு வழங்கிக்கொண்டே இருத்தலும், திறை வாங்கிக்கொண்டே இருத்தலையும் இப்பாடலில் புலவர்
பாடினார். (http://puram400.blogspot.com/2010_03_01_archive.html)
2.0 கொண்கானங் கிழானது ஈகை குணம்
” கடலருகே சென்றாலும்,
மக்களுக்கு நீர் வேட்கை (தாகம்) ஏற்படுமாயின், அவர்கள் அக்கடல் நீரை அருந்த முடியாது.
கடல் நீர் உப்பு நீரானதால், அந்நீருக்குத் தாகத்தைத் தணிக்கும் இயல்பு இல்லாமல் போகிறது.
எனவே, நீர் வேட்கையைத் தவிர்க்க மக்கள் வேறு நீர் மூலங்களையே நாடிச் செல்வர். அது போன்று,
பெருஞ்செல்வம் படைத்த வேந்தராயினும், எங்கள் புரை தீர்க்கவல்லாதவராய் இருப்பின், அதாவது
கொடை குணம் இல்லாதவராய் இருப்பின், அவரைப் பாராட்டிப் பாடாமல் வலியோரை வாழவைக்கும்
எண்ணம் கொண்ட தலைமகனை நாங்கள் தேடிச் சென்று புகழ்ந்து பாடுவோம். அவ்வகையில் நான் நாடி
வந்துள்ள தலைவனே” என்று புலவர் கொண்கானங் கிழானைப் புகழ்ந்து பாடியுள்ளார். இதை,
திரைபொரு முந்நீர்க் கரைந்ணிச்
செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர்; அதுபோல்
அரசர் உழய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர்;
அதனால்,
யானும், பெற்ற தூதியம் பேறியா
தென்னேன்;
உற்றெனன் ஆதலின் உள்ளி வந்தனனே (புற : 154)
என்ற வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.
(ஔவை சு. துரைசாமிப் பிள்ளை. 1996. புறநானூறு(1-200
பாட்டுக்கள்))அதாவது தன் வறுமையைப் போக்கக்கூடிய ஆற்றலுடையவன் கொண்கானங் கிழான்
மட்டுமே என்பதால், அவன் நாட்டைச் சிறப்பித்து பாடும் நோக்கில் வந்ததாகப் பாடும் புலவரின்
கூற்றிலிருந்து இத்தலைவன் மிகப் பெரிய கொடை நெஞ்சம் கொண்டவன் என்ற உண்மை குன்றின் மேலிட்ட
விளக்கு போல மிளிர்ந்து காணப்படுகிறது.
ஈயென இரத்தல் அரிதே நீயது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர் ( புற : 154)
என்றும் மோசிகீரனார் கொண்கானங் கிழானை நோக்கிப் பாடுகின்றார்.
இரவலன் கேட்டுப் பெறுதல் வேண்டும் என்பதை விடுத்து முகமறிந்து வறுமையை நீக்க வேண்டும்
என்கிறார் புலவர். அவ்வாறு முகமறிந்து நல்கும் கொடைத் திறம் கொண்ட தலைவனாகாவே புலவர் கொண்கானங் கிழானை நோக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, சங்க காலத்தில், தமிழகத்தில் பல புகழ்பெற்ற மலைகள் இருந்தாலும்
அவை கொடை அல்லது கொற்றத்தில் மட்டுமே சிறப்புற்று விளங்கின. ஆனால், கொண்கானங் கிழானின்
மலையோ கொடையிலும் கொற்றத்திலும் பேர் பெற்று விளங்கின. இம்மலையைப் பாடிச் செல்லும்
புலவர்களுக்குப் பரிசுகள் கிடைப்பது உறுதி. மேலும் வீரத்தில் சிறந்து விளங்கிய கொண்கானங்
கிழானுக்குச் சுற்றுப்புற சிற்றரசர்கள் திரை செலுத்தி வந்துள்ளனர். (டாக்டர் உ.வே.
சாமிநாதையர். 1956. எட்டுத்தொகையுள் எடாவதாகிய புறநானூறு மூலமும் உரையும்) இவ்வாறு சங்க காலத்தில் கொடைக்கும்
வீரத்திற்கும் பெயர் பெற்ற ஒரு தலைவனாகவே கொண்கானங் கிழான் திகழ்ந்து வந்துள்ளான் என்பது
மறுப்பதற்கில்லை.
ஒன்று நன்குடைய
பிறர்குன்றம்; என்றும்
இரண்டு நன்கு உடைத்த கொண் பெருங்காணம்
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டிட்
தொடுத்துண்க் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று;
நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே (புற :
154)
மேலும், கொண்கானங் கிழானது வண்மை நலத்தைப் பெற்று இன்புற்ற மோசிகீரனார், அவன்
பாணர் கூட்டத்துக்கு வேண்டுவனவற்றை நிரம்ப நல்கி அவரது வறுமையைப் போக்கி ஆதரிக்கும்
சிறப்பினைப் பாணாற்றுப்படை வாயிலாக வலியுறுத்துகின்றார்.
அதாவது சூரியன் மலரும் திசையை நோக்கியவாரே உள்ள நெருஞ்சிப் பூக்களைப் போல்,
வறுமையால் வாடும் யாழ்ப்பாணர்கள், தம் கையில் ஏந்தி நிற்கும் பிச்சை பாத்திரம் கொண்கானங்
கிழானது மார்பையே பொருள் நோக்கி எதிர்பார்த்து நிற்கும் என்று புலவர் குறிப்பிடுகின்றார்.
இதில் இத்தலைவனது கொடைப் பண்பு புலவரால் சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளது. இக்கருத்தினை,
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு
இலம்படு புலவர் மண்டை, விளங்குபுகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தந்தார் அகலம் நோக்கின மலர்ந்தே (புற : 155)
என்ற
வரிகளின் வழி அறிய முடிகின்றது.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வா யெல்லாஞ் செயல் (திரு: 33)
என்று
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே வான்புகழ் வள்ளுவர் கூறிச் சென்றுள்ளார். இக்குறள், ஒருவன்
தன்னால் இயன்றவரையில் அறச்செயலைத் தக்க இடங்களிலெல்லாம் இடைவிடாது செய்ய வேண்டும் என்ற
கருத்தையே வலியுறுத்துகிறது.(எம் சிவசுப்ரமணியன். 2011. திருக்குறள் தெளிவுரை)
இக்குறளின் விளக்கத்திற்கேற்பவே கொண்கானங் கிழானும் தன்னால் இயன்ற அறச் செயல்களைப்
பாணர்களுக்குச் செய்து வந்தான். சுருங்கக்கூறின் கொண்கானங் கிழான், பாணர்களைக் காக்கும்
வள்ளலாகவே திகழ்ந்தான் என்று கூறினால் அது மிகையாகாது.
3.0 முடிவுரை
இவ்வாறு புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடல் 154, 155, 156 ஆகியவற்றில் புலவர்
மோசிகீரனார் கொண்கானங் கிழானது கொடைப் பண்பினை உலகுக்கு உணர்த்தியுள்ளார். குடிகளைக்
காப்பதும் ஈகை நெஞ்சம் கொண்டவனாக இருத்தலுமே நல்லதொரு தலைவனது மாண்பு என்பதை இப்புறநானூற்று
பாடல்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. இக்கருத்துகள் அன்று மட்டுமின்றி என்றென்றும் ஆட்சியாளர்களாலும்
தலைவர்களாலும் பின்பற்ற வேண்டியவையாக விளங்குகின்றன என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஒவ்வொரு ஆட்சியிலும் அறம் ஈகையாகவும் நீதியாகவும் காக்கப்பட வேண்டும்.
பிற உயிர்களுக்கு உதவுவதும், துன்பம் செய்யாமையுமே அறம்
ஆகும். அவ்வாறுபிறர் துன்பம் போக்கும் பண்பு இல்லாத தலைவர்கள், எக்காலத்திலும் மக்களது
அன்புக்கு ஆளாக இயலாது. பலவாறு மோசிகீரனரால் சிறப்பிக்கப்பட்டுள்ள கொண்கானங் கிழான்
மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தலைவனாகவே புறநானூற்றுப் பாடல்களில் வலம் வருகின்றான்.
இதையே பொய்யாமொழிப் புலவரும்,
கொடையாளி செங்கோல்
குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்
கொளி (திரு:390)
என்று
கூறியுள்ளார். கொடை, அன்பு, செங்கோல் முறை, குடிகளைக் காத்தல் ஆகிய நான்கு செயல்களையும்
உடையவன் அரசர்களுக்கெல்லாம் ஒளி போன்றவன் .(எம் சிவசுப்ரமணியன். 2011. திருக்குறள்
தெளிவுரை) என்ற பொருள் விளக்கத்தைக் கொண்ட இக்குறளும் ஒரு தலைவனுக்குத் கொடைத்
திறம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை வலியுறுத்துகிறது. மக்களும் மன்னனும் நல்ல
வழியில் வாழ சிறந்த எடுத்துக்காட்டாகவே கொண்கானங் கிழானது மூன்று பாடல்களும் புறநானூற்றில்
திகழ்கின்றன.
துணைநூற்பட்டியல்
அ. ச. ஞானசம்பந்தன்.1956.
அகமும் புறமும், சென்னை: பாரி நிலையம்
உ.வே.
சாமிநாத ஐயர். 1956. எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய புறநானூறு மூலமும் உரையும்,
சென்னை : கபீர் அச்சுக்கூடம்
எம். சிவசுப்ரமணியன்.
2011. திருக்குறள் தெளிவுரை, சென்னை: கமர்சியல் பதிப்பகம்
ஔவை
சு.துரைசாமிப் பிள்ளை. 1996. புறநானூறு (1-200 பாட்டுக்கள்), சென்னை: திருநெல்வேலித்
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
கா.
கோவிந்தன். 1955. சங்ககால அரசர் வரிசை, சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
ராம.குருநாதன்.
1999. புறநானூறு ஒரு புதிய பார்வை, சென்னை: வானதி பதிப்பகம்
No comments:
Post a Comment