Wednesday, February 5, 2014

அகநானூற்றில் இயற்கை ஈடுபாடு

1.0 முன்னுரை
அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.
அகநானூற்று பாடல்களில்  எல்லையில்லா  இயற்கை வளம் மிகுந்திருப்பதைக் காண இயலுகின்றது. இப்பாடல்களில் மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்ற கண்கவர்; உள்ளங்கவர் இயற்கை வர்ணனைகள் பெரும்பாலான பாடல்களில் பெருகி காணப்படுகின்றன.

2.0 அகநானூற்றில் இயற்கை ஈடுபாடு

2.1 மரங்கள்


·         ஆலமரம் (ஆலம்)
·         இருப்பை
·         இலவம்
·         இற்றி (இத்தி)
·         ஈந்து
·         உகாய்
·         ஓமை
·         காஞ்சி
·         காயா
·         குரவம்
·         குருந்தம்
·         கொன்றை
·         கோங்கு
·         சந்தனம் (சாந்தம்)
·         சவுக்கு(இகணை)
·         ஞாழல்
·         ஞெமை
·         தாழை (கைதை)
·         தேக்கு
·         தேற்றா (இல்லம்)
·         நாரத்தை (நரந்தம்)
·         நாவல்
·         நுணா
·         நெல்லி
·         நொச்சி
·         பலா
·         பனை(பெண்ணை,போந்தை)
·         புன்னை(வழை)
·         மரா(கடம்ப மரம்)
·         மருதமரம்
·         மாமரம்
·         முருக்கு
·         முருங்கை
·         மூங்கில்(கழை,வேய்,அரில்,புல்)
·         யா
·         வஞ்சி
·         வாகை (உழிஞ்சில்)
·         வாழை
·         வேங்கை
·         வேலமரம்



ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! ''
(அக:191)
பொருள்தேடச் செல்ல எண்ணிய தன் நெஞ்சுக்குத் தலைவன் சொல்கிறான்.
உமணர் காளைமாட்டின் மேல் உப்பை ஏற்றிக்கொண்டு ஊர் ஊராக விற்கச் செல்வர். அவர்கள் தம் கால்களில் தோல் செருப்பு அணிந்திருப்பர். ஊரைக் கண்டதும் மணி அடிப்பர். அதனைக் கேட்டதும் ஊர்மக்கள் வீளை(வாய்விசில்) அடித்துக்கொண்டு ஓடிவந்து அவர்களுக்குப் பாதுகாவலாக இருப்பர்.
இப்படிப்பட்ட ஓமை மரக் காட்டில், நெஞ்சே! நீ பொருள் தேடச் செல்லப்போகிறாயா? ஆயின் முலை போன்ற பற்களையும், ஆற்றறல் போன்ற கூந்தலையும் கொண்ட உன்னாளுக்குச் சொல்லும் வலிமை உனக்கு இருக்கிறதா என்று தன் நெஞ்சிடம் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைகிறது. இங்குத் தலைவன் செல்லவிருக்கும் பாதையை விவரிக்கும் பொருட்டு அங்கு ஓமை மரங்கள் அமைந்திருப்பதாகப் புலவர் வர்ணித்துள்ளார்.
2.2 மலர்கள்


·         அடுப்பம்
·         அதிரல்
·         அலரி
·         அல்லி
·         அவரை
·         ஆம்பல்
·         இருப்பை
·         இலவம்
·         ஈங்கை
·         எருக்கம்
·         கரந்தை
·         கரும்புப்
·         கருவிளை
·         களரியாவிரை
·         காஞ்சி
·         காந்தள்
·         காயாம்பூ
·         குரவம்
·         குருந்தம்
·         குவளை
·         கூதளம்
·         கொன்றை
·         கோங்கம்பூ
·         செங்கழுநீர்
·         செருந்தி
·         ஞாழல்
·         தாமரை
·         தாழம்பூ
·         தேற்றா மலர்
·         நீர்முள்ளி
·         நீலம்
·         நுணாப்ப
·         நெய்தல்
·         நொச்சி
·         பகன்றை
·         பனம்பூ


·         பாதிரி
·         பிச்சி
·         பிடவம்
·         பீர்க்கம்பூ
·         புன்னை
·         மரா மலர்
·         மல்லிகை
·         மாம்பூ
·         முருக்கம்பூ(கவிர்)
·         முருங்கை
·         முல்லை
·         வாகை
·         வாழை
·         வெட்சி
·         வேங்கை




நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
காடே கம்மென்றன்றே; அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
(அக: 23)
என்ற வரிகளின் வழி பொருள் தேடச் சென்ற தலைவன் மீள்வேன் என்று சொன்ன மழைக்காலம் வந்துவிட்டது. அவர் வரவில்லை என்று சொல்லித் தலைவி ஏங்கும்போது மழையின் செழிப்பைக் கூறுகிறாள். தளவம், பிடவம் பூக்கள் மலர்ந்து காடே 'கம்' என்று மணக்கிறது. வலையல் உடைந்தது போல் கோடல் பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இரலைமான் அறுகம்பூல்லின் கிழங்கை மேய்ந்துவிட்டு ஆற்றுமணல் தெரிய ஓடும் ஊற்றுநீரைப் பருகுகின்றன. அவர் என்னை உண்ட நொச்சிச்செடி பூத்துக் கொட்டுகிறது என்றாலும் தலவர் இன்னும் வரவில்லை என்று தலைவி கவலையுறுகிறாள். (மாணிக்கனார், அ. 1999. ப.158-159) இப்பாடலில் வரும் பிடவும் பூ நெருக்கமான குலைகளை உடையது. இது, மாலையில் பூக்கும்.
2.3 பழங்கள்


·         களாக்கனி
·         நாவல்கனி
·         பலா
·         பாகல்கனி
·         மாங்கனி
·         வாழை
·         விளங்கனி



கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை
(அக:2)

என்ற வரிகள்,  பழுத்து உதிர்ந்த வாழை, பலாக்கனிகளால் பெருகிய தேன் விரவிய சுனைநீரைத் தெரியாமல் அருந்திய ஆண்குரங்கு பக்கத்தில் உள்ள சந்தன மரத்தில் ஏறமாட்டாமல், பூக்களாலான படுக்கையில் களிப்புடன் உறங்கும் எதிர்பாராத இன்பத்தைப்பெறும்; அதுபோலவே வேறு பல விலங்குகளும் எளிதில் இன்பம் எய்தும் நாட்டை உடையவனே! நீ விரும்பும் இன்பம் உனக்கு எவ்வாறு அரிதாகும்? என்று தோழி தலைவனிடம் வினவுவதாக அமைகிறது. (மாணிக்கனார், அ. 1999. பக். 59-61)
ஆண் குரங்கு தேனை அறியாது நுகர்ந்து தன் இயல்பான தொழிலாகிய மரம் ஏறுதலையும் கைவிட்டு, உறங்குவது போல, நீயும் களவொழுக்கத்தில் இன்பம் நுகர்ந்து, உன் தொழிலாகிய அறநெறியையும் கைவிட்டு, களவொழுக்கத்தை நீட்டித்து,  மணம் முடிக்காது நிற்கிறாய் என்று  தோழி தலைவனிடம் கூறி அவன் தலைவியை மணம் மேற்கொள்ள வேண்டும் என்று நேராகக் கூறாமல் கருப்பொருள் கொண்டு குறிப்புக் காட்டுகிறாள்.
2.4 விலங்குகள்


·         அணில்(வெளில்)
·         ஆடு(தகர், மறி, கடா)
·         ஆமை
·         ஆளி
·         எருமை(காரான்)
·         எறும்பு
·         ஒட்டகம்
·         ஓந்தி(ஓதி)
·         கரடி(பெருங்கை ஏற்றை, எண்கு, உளியம்)
·         கழுதை(அத்திரி)
·         காளை(பகடு, எருது, ஏறு, விடை)
·         குதிரை(புரவி, பரி, கலிமா, இவுளி)
·         குரங்கு(கலை, மந்தி, முசு, கடுவன்)
·         சிங்கம்
·         செந்நாய்
·         தவளை(தேரை)
·         நண்டு(ஞெண்டு, களவன், அலவன்)
·         நரி
·         நாய்(ஞமலி)
·         பசு(ஆ, ஆன், கறவை, ஆயம், நிரை, நாகு)
·         பல்லி
·         பன்றி(கேழல்)
·         பாம்பு(அரா, அரவு, நாகம்)
·         நீர்நாய்
·         புலி(பேழ்வாய் ஏற்றை, உழுவை, வயமான்)
·         பூனை(வெருகு)
·         மான்(மரை, இரலை, நவ்வி, கலை, மா, உழை, திரி மருப்பு ஏற்று, ஏறு)
·         முதலை(கராம்)
·         முயல்
·         மூதாய்
·         யானை
·         வெள்ளெலி



எவனோ வாழி தோழி பொரிகால்
பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ
ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரமபல கடந்தோர்க் கிரங்குப என்னார்
(அக: 95)
என்ற பாடல் வரிகளின் மூலம் தலைவனுடன் ஓடிப்போக உடன்பட்ட தலைவி, மழை பெய்யும்போது விழும் பனிக்கட்டி போல் உதிரும் இரும்பைப் பூவை மேயும் கரடிகள் நிறைந்த காட்டு வழியில் நான் செல்லப்போகிறேன். என் நெற்றி பசந்ததையும், மேனி வாடியதையும் கண்ட ஊர் கௌவை மொழியக் கேட்டு இது ஒவ்வாது என்று கூறிக்கொண்டிருந்த தாய் நான் ஓடிப்போனதைக் கேட்டால் என்ன ஆவாளோ என்று தோழியுடம் வருத்தமாகக் கூறுகிறாள். இப்பாடலில் தான் தலைவனுடன் செல்லும் காட்டுப் பாதையைத் தலைவி வர்ணிக்கிறாள். அப்பாதை ஆபத்து நிறைந்த கரடிகள் இருக்கும் பாதை என்று இப்பாடலில் புலவர் விலங்கினத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
            அதே வேளையில், தலைவன் நாட்டு வண்டின் இயல்பைச் சாக்காக வைத்துக் கூறி தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அவனுடைய ஊருக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
தலைவன் நாட்டு வண்டுகள் சுனையில் பூத்த பூக்களைத் திறந்து பார்க்குமாம். அங்கிருந்து பறந்து சென்று வேங்கை மரத்திலுள்ள பூக்களை ஊதுமாம். அங்கிருந்து பறந்து சென்று காந்தள் பூவில் தேன் உண்ணுமாம். இவையெல்லாம் போதா என்று யானையின் மதநீரைக் குடிக்கக் கனவு காணுமாம். இங்கு வண்டை உவமைப் படுத்தி அந்த வண்டுபோல் தலைவன் இருந்துவிடக் கூடாது என்று  தோழி அறிவுரை கூறுகிறாள்.
மேலும் தலைவன் தலைவியை அடையும் வாய்ப்பு இல்லை என்பதற்கும் காரணம் கூறுகிறாள். தினை விளைந்து அறுவடை செய்யப்பட்டுவிட்டதாம். எனவே தலைவி தினைப்புனம் காக்க வரமாட்டாளாம். தலைவனை நினைந்து தலைவி ஏங்குவதால் அவளது தோற்ற வேறுபாட்டைக் கண்டு ஊரார் பழி தூற்றுகின்றனராம். மேலும் இவளைப் பெற்ற கானவர் குடியினரோ களிற்று முகத்தில் பாய்ந்த கறையுடன் கூடிய அம்பும் கையுமாகத் திரிபவர்கள் தலவனைக் கண்டாள் ஆபத்து என்கிறாள். இதை,
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
வால் நிணப் புகவின், கானவர் தங்கை
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.
(அக: 132)
என்ற பாடலின் வழி அறிய முடிகிறது.

2.5 பறவைகள்


·         அசுணம்
·         அன்னம்
·         அன்றில்
·         இதல்(கவுதாரி, காடை)
·         ஈயல்
·         காக்கை
·         கிளி(கிள்ளை)
·         குயில்
·         குருகு(நாரை)
·         குருவி
·         கூகை(குடிஞை, ஆந்தை)
·         கொக்கு
·         சிச்சிலி(சிரல்)
·         சேவல் கோழி
·         பருந்து(எருவை, கழுகு)
·         புறா
·         பூழ்
·         மயில்(தோகை, மஞ்ஞை)
·         மின்மினி
·         வண்டு
·         வாவல்
·         வானம்
·         வல்லூறு




வல்லூறு என்னும் கழுகு வகையைச் சேர்ந்தது எழால் என்னும் பறவை. இதன் தலைமயிர் கதிர்த்து இருக்கும். (பொது பொது என்று சிலிர்த்துக்கொண்டிருக்கும்). நிழலில்லாத வெட்டவெளியில் பறந்து இரை தேடும். மக்கள் விட்டு விலகிய பாழ் மன்றங்களில் இருக்கும். அது தன் உயிர்ப்புக் குரலை எழுப்பித் தன் துணையை அழைக்கும். குட்டிச்சுவர் மனையில் இருந்துகொண்டு அது எழுப்பும் ஒலியை எண்ணிப் பார்த்து தலைவர் தன்னை நினைக்கமாட்டாரா என்று எண்ணித் தலைவி ஏங்குகிறாள் (http://ta.wikipedia.org/wiki/காவிரி_பூம்பட்டினத்துச்_செங்கண்ணனார்) என்ற செய்தி,
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
காமர் சேவல் ஏமம் சேப்ப
(அக:103)
என்ற பாடல் வரிகளில் வெளிப்படுகின்றது.



2.6 மீன்கள்
·         அயிலை(அயிரை)
·         ஆரல்
·         இறால்
·         கயல்
·         சுறா(கோட்டுமீன்)
·         வரால்
·         வாளை

எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
5துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம்ஆயினும்,
(அக: 106)
தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் என்று பரத்தை தலைமகளின் பாங்காயினோர் கேட்பச் சொல்லுகிற செய்தி இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் தன்னை மீன் என்றும், தலைமகனைச் சிரல் என்றும் பரத்தை குறிப்பிடுகிறாள். தன்னோடு தலைமகன் இருந்தான் என்று அவனைப் புலக்காமல் தலைமகள் தன்னைப் புலந்து கூறுகிறாள். அவனை தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் உயிர் வாழ மாட்டான். எனவே தான் செய்தது சரி என்று பரத்தை குறிப்பிடுகின்றாள்.
2.7 சுனைகள்

இயற்கை நீர் நிலைகளுள் சுனையும் ஒரு வகையாகும். சுனைகள் மலைகளில் காணப்படும் நீர்நிலை வகையாகும். சுனைகள் மலைப்பகுதியில் வாழ்ந்த விலங்கினங்கட்கு நீராதாரமாக விளங்கி வந்துள்ளன.. பெரும்பாலான இடங்களில் இச்சுனைகள் வளமுணர்த்தவும் வறுமையுணர்த்தவும் கூறப்பட்டுள்ளன. (http://tamilnation-tamilmani.blogspot.com/2012/04/blog-post_05.html) பாறைகளிடையில் சுனைகள் அமைந்துள்ளன. அதன் நீரையும் பலாப்பழத்தின் சுனையையும் தேனையூம் சேர மாந்திய ஆண் குரங்குகானது களிப்புடன் கிடந்து உறங்கும். இதனை,
 ‘‘ஊழுறு தீங்கனி உண்ணுநார்த் தடுத்த
சுராற் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை
                                                                                  -        அகம் 2: 2-7

எனும் பாடலடிகள் வழி அறியலாம்.


3.0 முடிவுரை

சுருங்கக்கூறின் சங்க கால தமிழர்கள் மிகவும் இயற்கையை நேசித்தவர்கள் என்பது அகநானூற்று பாடல்களின் வழி அறிய இயலுகிறது. அகநானூற்று பாடல்களில் சுற்றுப்புறத்தை வர்ணிக்கவும், தலைவன் தலைவியின் குணாதிசயங்களை எடுத்துக்காட்டவும், பாடலின் நிலையை உணர்த்தவும் இயற்கை வர்ணனைகள் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.அகநானுற்றுப் புலவர்கள் புலவர்கள் இயற்கையின் ஊடாக மானிட உணர்வுகளை இயங்கவிட்டும், சொல்லை வலிமையாக்கி உணர்ச்சிகளைச் சுமக்கச் செய்தும், நம்மைச் சுற்றி நிகழ்வது போலக் காட்சிகளை அமைத்த காட்டும் கவிதை வெளிப்பாட்டுத் திறன்களை உடையவர்கள். இவர்கள் தான் பெற்ற பெரு மகிழ்வை வையகமும் பெற வேண்டுமெனும் நன்னோக்கினால் இயற்கையின் இயல்புகளை உயர்வு நவிற்சியின்றி உள்ளது உள்ள வாறே சுவைபட எடுத்து இயம்பியுள்ளனர்.இதிலிருந்து, இவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்றால் அது மிகையாகாது.




துணைநூற்பட்டியல்
மாணிக்கனார், அ. 1999. அகநானூறு மூலமும் உரையும். சென்னை: வர்த்தமானன் பதிப்பகம்.
மாணிக்கனார், அ. 1999. அகநானூறு மூலமும் உரையும் (களிற்றுயானை நிரை). சென்னை: வர்த்தமானன் பதிப்பகம்.
1946. அகநானூற்றுச் சொற்பொழிவுகள். சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
வரதராசன், மு. 1954. நெடுந்தொகைச் செல்வம். சென்னை: பாரி நிலையம்   

No comments:

Post a Comment