ஆறறிவு கொண்டவன்
மனிதன். அப்படியென்றால், 1 முதல் 5 அறிவு கொண்ட ஜீவராசிகள் எவை என்று ஆராய்ந்து பார்த்தோமேயானால்,
தொல்காப்பியர் உயிர்களின் அறிவு நிலையைக் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு நாக்கே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
புல்லும் மரணும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
மக்கள் தாமே ஆறாறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
ஒருசார் விளங்கும் உள என மொழிப
அதாவது ஐம்புலன்களை அடிப்படையாகக் கொண்டு உயிர்கள் அவற்றில்
எந்த மற்றும் எத்தனை புலன்களைப் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்ந்து அதற்கேற்றவாறு உயிர்கள்
வகுக்கப்பட்டுள்ளன.
மலர்களை எடுத்துக் கொண்டுமேயானால், அம்மலர்கள் இறைவழிபாடு,
அலங்காரம், மருத்துவம், என்று பல்வேறு கூறுகளில் பயன் ஆற்றும் வல்லமை உடையவை. மலர்கள்
உதிர்ந்து விட்டாலும் கூட, அவை நிலத்துக்கு உரமாகின்றன. ஓர் அறிவு கொண்ட மலர்களினால்
இவ்வளவு பயன் கொடுக்க இயலுகின்ற போது, ஐம்புலன்களோடு, ஆறாவதாகப் பகுத்தறியும் ஆற்றலையும்
கொண்டு ஆறறிவு படைத்த உயிராகத் திகழும் மனிதனின் ஆற்றலும் செயலும் அளவிட முடியாததாகத்
தானே இருக்க வேண்டும்.
எனினும், ஏனோ நம்மிலும் சிலர் திருப்தியற்ற நிலையிலேயே தங்கள்
வாழ்க்கையக் கடந்து வருகின்றனர். உள்ளதைக் கொண்டு திருப்தி கொள்ளல் வேண்டும்
என்ற கூற்று சமகாலத்தில் எந்த அளவிற்கு அமலாக்கத்திற்கு உரியது என்பது எனக்குத் தெரியவில்லை.
பொருள் தேடி போட்டி போட்டு கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இவ்வாறு கூறுவது
நம்முடைய இயலாமையையே சுட்டிக் காட்டுகின்றது என்பது என் கருத்தாகும். ஆனால், அது நிஜமல்ல
என்பதை அறிந்து கொண்டேன். அனைவரின் தேடலும் சமமானது அல்ல எனும் போது, சிலரால் உள்ளதைக்
கொண்டு திருப்தி அடைய இயலும் என்பது புரிகின்றது.
சக மக்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நான் மட்டும் துன்பத்தில்
உழல்கிறேனோ என்று ஏங்கும் உள்ளங்கள் பல உண்டு. இதனால், தன்னைத் தானே குறைத்து மதிப்பிடவும்
நாம் துணிந்து விடுகின்றோம். ஆனால், மிகவும் அழகான ஆற்றல் மிக்க ஆன்மாவை இங்கு நாம்
இழிவுக்கு உள்ளாக்குகிறோம் என்பதுதான் வேதனைக்குரிய உண்மையாகும். இம்மாதிரியான சிந்தனையால்
மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதோடு, தன் வாழ்வையும் இறுதி வரை ஏக்கங்களோடு நகர்த்தும்
நிலையே ஏற்படுகின்றது. இச்செயலானது, படைத்தவனுக்கும் இயற்கைக்கும் முரனானதாகவே நான்
கருதுகின்றேன்.
தன்னைத் தானே நேசிக்கின்ற ஒருவன்,
இறைவனாலும் இயற்கையினாலும் நேசிக்கப்படுகின்றான்.
தனக்குத் தானே உதவும் ஒருவன்,
இறைவனாலும் இயற்கையினாலும் உதவப்படுகின்றான்.
வாழ்வில் வாய்ப்புகள் அமையாது. அவை அமைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்படும் வாய்ப்புகளில் நாம் எண்ணிய வாழ்க்கை நிச்சயம் கிட்டும். தேடல்
நிறுத்தப்படக்கூடாது. அதற்கு விடையும் கிட்டும்; நமக்கு விடியலும் கிட்டும். நாம் அமைக்கும்
நம் வாழ்க்கைப் பாதை வருந்தும் பாதையாக இல்லாமல் பிறர் வாழ்த்தும் பாதையாக அமைப்பது
நம் கடமை மட்டுமல்ல, நம் உரிமையும் கூட.
நல்ல படைப்பு! தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்!
ReplyDeleteதொடர்க உங்கள் நற்பணி!