Thursday, February 27, 2014

என் தேடலுக்கு விடை


    


ஆறறிவு கொண்டவன் மனிதன். அப்படியென்றால், 1 முதல் 5 அறிவு கொண்ட ஜீவராசிகள் எவை என்று ஆராய்ந்து பார்த்தோமேயானால், தொல்காப்பியர் உயிர்களின் அறிவு நிலையைக் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு நாக்கே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
புல்லும் மரணும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
மக்கள் தாமே ஆறாறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே
ஒருசார் விளங்கும் உள என மொழிப

அதாவது ஐம்புலன்களை அடிப்படையாகக் கொண்டு உயிர்கள் அவற்றில் எந்த மற்றும் எத்தனை புலன்களைப் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்ந்து அதற்கேற்றவாறு உயிர்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மலர்களை எடுத்துக் கொண்டுமேயானால், அம்மலர்கள் இறைவழிபாடு, அலங்காரம், மருத்துவம், என்று பல்வேறு கூறுகளில் பயன் ஆற்றும் வல்லமை உடையவை. மலர்கள் உதிர்ந்து விட்டாலும் கூட, அவை நிலத்துக்கு உரமாகின்றன. ஓர் அறிவு கொண்ட மலர்களினால் இவ்வளவு பயன் கொடுக்க இயலுகின்ற போது, ஐம்புலன்களோடு, ஆறாவதாகப் பகுத்தறியும் ஆற்றலையும் கொண்டு ஆறறிவு படைத்த உயிராகத் திகழும் மனிதனின் ஆற்றலும் செயலும் அளவிட முடியாததாகத் தானே இருக்க வேண்டும்.

எனினும், ஏனோ நம்மிலும் சிலர் திருப்தியற்ற நிலையிலேயே தங்கள் வாழ்க்கையக் கடந்து வருகின்றனர். உள்ளதைக் கொண்டு திருப்தி கொள்ளல் வேண்டும் என்ற கூற்று சமகாலத்தில் எந்த அளவிற்கு அமலாக்கத்திற்கு உரியது என்பது எனக்குத் தெரியவில்லை. பொருள் தேடி போட்டி போட்டு கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இவ்வாறு கூறுவது நம்முடைய இயலாமையையே சுட்டிக் காட்டுகின்றது என்பது என் கருத்தாகும். ஆனால், அது நிஜமல்ல என்பதை அறிந்து கொண்டேன். அனைவரின் தேடலும் சமமானது அல்ல எனும் போது, சிலரால் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய இயலும் என்பது புரிகின்றது.

சக மக்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நான் மட்டும் துன்பத்தில் உழல்கிறேனோ என்று ஏங்கும் உள்ளங்கள் பல உண்டு. இதனால், தன்னைத் தானே குறைத்து மதிப்பிடவும் நாம் துணிந்து விடுகின்றோம். ஆனால், மிகவும் அழகான ஆற்றல் மிக்க ஆன்மாவை இங்கு நாம் இழிவுக்கு உள்ளாக்குகிறோம் என்பதுதான் வேதனைக்குரிய உண்மையாகும். இம்மாதிரியான சிந்தனையால் மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதோடு, தன் வாழ்வையும் இறுதி வரை ஏக்கங்களோடு நகர்த்தும் நிலையே ஏற்படுகின்றது. இச்செயலானது, படைத்தவனுக்கும் இயற்கைக்கும் முரனானதாகவே நான் கருதுகின்றேன்.

தன்னைத் தானே நேசிக்கின்ற ஒருவன்,
இறைவனாலும் இயற்கையினாலும் நேசிக்கப்படுகின்றான்.
தனக்குத் தானே உதவும் ஒருவன்,
இறைவனாலும் இயற்கையினாலும் உதவப்படுகின்றான்.


வாழ்வில் வாய்ப்புகள் அமையாது. அவை அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் வாய்ப்புகளில் நாம் எண்ணிய வாழ்க்கை நிச்சயம் கிட்டும். தேடல் நிறுத்தப்படக்கூடாது. அதற்கு விடையும் கிட்டும்; நமக்கு விடியலும் கிட்டும். நாம் அமைக்கும் நம் வாழ்க்கைப் பாதை வருந்தும் பாதையாக இல்லாமல் பிறர் வாழ்த்தும் பாதையாக அமைப்பது நம் கடமை மட்டுமல்ல, நம் உரிமையும் கூட. 


Wednesday, February 5, 2014

புறநானூறு : கொண்கானங் கிழானின் கொடை

1.0 முன்னுரை
1.1 புறநானூறு
சங்க இலக்கியங்களைப் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை ஆகியவற்றின் கீழ் அடக்க இயலும். இவற்றில் எட்டுத்தொகை நூல்களில் புறநானூறும் ஒன்றாகும். இத்தொகை நூல் நானூறு பாடல்களை உள்ளடக்கியதாகும்.  வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளை உள்ளடக்கியே இப்பாடல்கள் அமைந்துள்ளன.

புறநானூற்றில், மன்னர்கள், வள்ளல்கள், குறுநில மன்னர்கள் போன்றோரது புறச்செயல்களைப் புகழ்ந்தே புலவர்கள் பாடல்களை இயற்றினர். இப்புலவர்கள் பல்வேறு காலங்களில் தோன்றியவர்களாகவும், பல்வகையான சமூக பின்னனியைக் கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். இப்புலவர்களில் சிலர் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றனர். பெண் புலவர்களும் புறநானூற்றில் பாடல்களை இயற்றியுள்ளனர். (வித்துவான் ஜி. சுப்பிரமணிய பிள்ளை. 1944. புறநானூறும் புலவரும்)

இப்பாடல்கள் நூற்று நாற்பத்தேழுக்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்பட்டவை என அறிய வருகிறது. இதில் பலரது இயற்பெயரை அறிய முடியவில்லை. அதனால், சில புலவர்கள் பாடல் வரிகளில் இடம்பெற்றிருக்கும் ஊர்களின் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றனர். மேலும் சிலர் தொழிலாலும், மரபாலும், பல்வேறு காரணப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டுள்ளனர். (வித்துவான் ஜி. சுப்பிரமணிய பிள்ளை. 1944. புறநானூறும் புலவரும்)
1.2 மோசிகீரனார்
மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள மோசூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மோசிகொற்றனார் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. (டாக்டர் உ.வே. சாமிநாதையர். 1956. எட்டுத்தொகையுள் எடாவதாகிய புறநானூறு மூலமும் உரையும்) இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் கீரன் குடியைச் சேர்ந்தவராயிருத்தல் கூடும் என்ற கருத்தும் உள்ளது. சேர மன்னனான தகடூர் எறிந்த இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். (http://ta.wikipedia.org/wiki/மோசிகீரனார்)

1.3 கொண்கானங் கிழான்
கொண்கானம், மைசூர் நாட்டின் தென்பகுதியையும், சேலம், கோவை மாவட்டங்களையும் கொண்டு திகழ்ந்த ஒரு நாடாகும். இந்த இடமே பின்னர் கொங்கணம் என அழைக்கப்பட்டது. அதே வேளையில், கொண்கானம் எனும் பெயருடைய மலையும் இந்த இடத்தில் அமையப்பெற்றதாலும் இந்நாட்டிற்கு கொண்கானம் என்ற பெயர் அமைந்திருக்கக் கூடும் என்பது வேறு சிலரது கருத்தாகும்.

இயற்கை அன்னை தன் பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடிய இடங்களில் கொண்கானம் நாடும் ஒன்று என்றால் அதை மறுப்பதற்கில்லை. இந்நாடு பொன்வளம் நிறைந்த நாடு என்பதை புலவர்கள் பலர் சங்க இலக்கிய பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நாட்டை கொடையும் கொற்றமும் மிக்க தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனையே மக்கள் கொண்கானங் கிழான் என்று அழைத்து வந்தனர். இக்கொண்கானங் கிழானது கொடைத் திறத்தையும் வீரத்தையும் அந்நாட்டின் இயற்கை வளத்தையும் புலவர் மோசிகீரனார் பலவாகப் புகழ்ந்து புறநானூற்றில் பாடியுள்ளார்.
                                   
கொண்கானங் கிழான் இயற்கையாகவே பெருஞ்செல்வத் தோன்றல் இல்லாதவனாயினும் தன்பால் நாடிவரும் பரிசிலர்க்கு இயன்றவற்றை நல்கி இன்புறுத்தும் ஈகை குணம் கொண்டவன். ஈகைக்கேற்ற தாளாண்மையும் அதன் சிறப்புக் காக்கும் தோளாண்மையும் இவன்பால் அதிகம் இருந்தமையால் புலவர் இவனைப் பாடிப் பாராட்டினார். (கா.கோவிந்தன். 1995. சங்ககால அரசர் வரிசை)

1.4 கொடைத் திறம்
கொடை என்பது ஈகை பண்பைக் குறிப்பதாகும். இரக்க குணத்துடன் வரியோருக்கு அவர்களது துன்பத்தைப் போக்கும் வண்ணம் பணமாகவோ பொருளாகவோ உதவுதலே கொடை எனப்படுகிறது. எத்தகைய பலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவியே அறமாகும். ஆனால், விளம்பரத்திற்காகவும் சுயநல நோக்குடனும் செய்யப்படும் உதவிகள் கொடைகளில் அடங்காது. தனது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, தம்மிடம் உள்ளதை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுப்பதே கொடை நெஞ்சர்களின் இயல்பு.

கொடை நெஞ்சர்கள் என்பவர்கள் ஒரு கணம் கூட சிந்தனைக்கு உட்படுத்தாமல் உள்ளத்தால் மகிழ்ச்சியுடன் கொடுப்பவர்களாவர். ஒரு சிறந்த கொடையாளி என்பவன் சிந்தித்துக் கொடுப்பவனும் அல்ல கொடுத்த பின்  சிந்திப்பவனும் அல்ல. இந்த உயர்ந்த தன்மை என்பது ஒரு சிலருக்கே அமையும். அதிலும் சங்க கால மன்னர்களில் பலர் கொடை நெஞ்சர்களாக வலம் வந்துள்ளனர் என்பதை புறநானுற்று பாடல்களின் வழி அறிய முடிகின்றது. அவ்வாறு தனது கொடைத் திறத்திற்குப் பெயர் போன தலைவனாகவே கொண்கானங் கிழான் என்பவனும் புறநானுற்றில் வலம் வருகின்றான். கொண்கானங் கிழானது கொடைத் திறத்தைப் புகழ்ந்தே புலவர் மோசிகீரனார் புறநானுற்றில் மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களது எண்ணிக்கை முறையே 154, 155 மற்றும் 156 ஆகும்.

1.5 புறநானூற்று பாடல்கள் (பாடல் எண் : 154, 155, 156)
இம்மூன்று பாடல்களும் புலவர் மோசிகீரனார் கொண்கானங் கிழானை நோக்கி பாடிய பாடல்களாக அமையபெற்றுள்ளன.

இதில் 154வது எண் கொண்ட  பாடல் இரத்தல் அரிது பாடல் எளிது என்ற தலைப்பைக் கொண்டது. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற பெருமன்னர்களைப் பாடி, புகழும் பரிசிலும் பெற்ற புலவர் மோசிகீரனார் தன்னிடம் வந்து தன் ஈகையைப் புகழ்வதைக் கண்டு கொண்கானங் கிழான் வியந்தான். மோசிகீரனார் தகுதிக்கேற்ப தான் அவருக்கு என்ன பரிசில் அளிக்க முடியும் என்று எண்ணினான். அவன் எண்ணியதை உணர்ந்த மோசிகீரனார் இந்த பாடலைக் கூறினார். இது பாடாண் திணையில் பரிசில் துறையில் பாடப்பட்ட பாடலாகும். இத்திணையில், ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகள் சிறப்பித்துக் கூறப்படும். புரவலர் முன் இரவலர், தாம் பெற விரும்பிய பொருளைக் கூறுவதே பரிசில் துறையாகும்.

அடுத்ததாக, 155வது எண் கொண்ட பாடல் ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி என்ற தலைப்பைக் கொண்டது. இப்பாடல் பாடாண் திணையில் பாணாற்று படை துறையில் பாடப்பட்ட பாடலாகும். கொண்கானங் கிழானிடம் பரிசில் பெற்று மகிழ்ச்சியுற்ற மோசிகீரனார் ஒரு பாணனைக் கொண்கானங் கிழானிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியில் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துவதே இத்துறையாகும்

இறுதியாக, 156வது எண் கொண்ட பாடல் பாடாண் திணையில் இயன்மொழி துறையில் பாடப்பட்ட பாடலாகும். இத்துறைப் பாடல்கள்  பாட்டுடைத் தலைவனின் இயல்புகளைக் கூறுகின்றன. கொண்கானங் கிழானது விருந்தை உண்டு மகிழ்ந்திருந்த மோசிகீரனார் அவனது கொண்கான மலையைக் கண்டு பாட விரும்பினார். கொண்கானங் கிழான் நாட்டுக்கு இரண்டு வளங்களான  இரவலர்க்கு வழங்கிக்கொண்டே இருத்தலும்,  திறை வாங்கிக்கொண்டே இருத்தலையும் இப்பாடலில் புலவர் பாடினார். (http://puram400.blogspot.com/2010_03_01_archive.html)


2.0 கொண்கானங் கிழானது ஈகை குணம்
” கடலருகே சென்றாலும், மக்களுக்கு நீர் வேட்கை (தாகம்) ஏற்படுமாயின், அவர்கள் அக்கடல் நீரை அருந்த முடியாது. கடல் நீர் உப்பு நீரானதால், அந்நீருக்குத் தாகத்தைத் தணிக்கும் இயல்பு இல்லாமல் போகிறது. எனவே, நீர் வேட்கையைத் தவிர்க்க மக்கள் வேறு நீர் மூலங்களையே நாடிச் செல்வர். அது போன்று, பெருஞ்செல்வம் படைத்த வேந்தராயினும், எங்கள் புரை தீர்க்கவல்லாதவராய் இருப்பின், அதாவது கொடை குணம் இல்லாதவராய் இருப்பின், அவரைப் பாராட்டிப் பாடாமல் வலியோரை வாழவைக்கும் எண்ணம் கொண்ட தலைமகனை நாங்கள் தேடிச் சென்று புகழ்ந்து பாடுவோம். அவ்வகையில் நான் நாடி வந்துள்ள தலைவனே” என்று புலவர் கொண்கானங் கிழானைப் புகழ்ந்து பாடியுள்ளார். இதை,

திரைபொரு முந்நீர்க் கரைந்ணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர்; அதுபோல்
அரசர் உழய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர்; அதனால்,
யானும், பெற்ற தூதியம் பேறியா தென்னேன்;
உற்றெனன் ஆதலின் உள்ளி வந்தனனே   (புற : 154)

என்ற வரிகளின் மூலம் அறிய முடிகின்றது. (ஔவை சு. துரைசாமிப் பிள்ளை. 1996. புறநானூறு(1-200 பாட்டுக்கள்))அதாவது தன் வறுமையைப் போக்கக்கூடிய ஆற்றலுடையவன் கொண்கானங் கிழான் மட்டுமே என்பதால், அவன் நாட்டைச் சிறப்பித்து பாடும் நோக்கில் வந்ததாகப் பாடும் புலவரின் கூற்றிலிருந்து இத்தலைவன் மிகப் பெரிய கொடை நெஞ்சம் கொண்டவன் என்ற உண்மை குன்றின் மேலிட்ட விளக்கு போல மிளிர்ந்து காணப்படுகிறது.
ஈயென இரத்தல் அரிதே நீயது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர் ( புற : 154)

என்றும் மோசிகீரனார் கொண்கானங் கிழானை நோக்கிப் பாடுகின்றார். இரவலன் கேட்டுப் பெறுதல் வேண்டும் என்பதை விடுத்து முகமறிந்து வறுமையை நீக்க வேண்டும் என்கிறார் புலவர். அவ்வாறு முகமறிந்து நல்கும் கொடைத் திறம் கொண்ட தலைவனாகாவே  புலவர் கொண்கானங் கிழானை நோக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சங்க காலத்தில், தமிழகத்தில் பல புகழ்பெற்ற மலைகள் இருந்தாலும் அவை கொடை அல்லது கொற்றத்தில் மட்டுமே சிறப்புற்று விளங்கின. ஆனால், கொண்கானங் கிழானின் மலையோ கொடையிலும் கொற்றத்திலும் பேர் பெற்று விளங்கின. இம்மலையைப் பாடிச் செல்லும் புலவர்களுக்குப் பரிசுகள் கிடைப்பது உறுதி. மேலும் வீரத்தில் சிறந்து விளங்கிய கொண்கானங் கிழானுக்குச் சுற்றுப்புற சிற்றரசர்கள் திரை செலுத்தி வந்துள்ளனர். (டாக்டர் உ.வே. சாமிநாதையர். 1956. எட்டுத்தொகையுள் எடாவதாகிய புறநானூறு மூலமும் உரையும்)  இவ்வாறு சங்க காலத்தில் கொடைக்கும் வீரத்திற்கும் பெயர் பெற்ற ஒரு தலைவனாகவே கொண்கானங் கிழான் திகழ்ந்து வந்துள்ளான் என்பது மறுப்பதற்கில்லை.  



ஒன்று நன்குடைய பிறர்குன்றம்; என்றும்
            இரண்டு நன்கு உடைத்த கொண் பெருங்காணம்
            நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டிட்
            தொடுத்துண்க் கிடப்பினும் கிடக்கும்;       அஃதான்று;
            நிறையருந் தானை வேந்தரைத்
            திறைகொண்டு பெயர்க்கும் செம்மலும்    உடைத்தே     (புற : 154)

மேலும், கொண்கானங் கிழானது வண்மை நலத்தைப் பெற்று இன்புற்ற மோசிகீரனார், அவன் பாணர் கூட்டத்துக்கு வேண்டுவனவற்றை நிரம்ப நல்கி அவரது வறுமையைப் போக்கி ஆதரிக்கும் சிறப்பினைப் பாணாற்றுப்படை வாயிலாக வலியுறுத்துகின்றார்.

அதாவது சூரியன் மலரும் திசையை நோக்கியவாரே உள்ள நெருஞ்சிப் பூக்களைப் போல், வறுமையால் வாடும் யாழ்ப்பாணர்கள், தம் கையில் ஏந்தி நிற்கும் பிச்சை பாத்திரம் கொண்கானங் கிழானது மார்பையே பொருள் நோக்கி எதிர்பார்த்து நிற்கும் என்று புலவர் குறிப்பிடுகின்றார். இதில் இத்தலைவனது கொடைப் பண்பு புலவரால் சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளது. இக்கருத்தினை,
            பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
            ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு
            இலம்படு புலவர் மண்டை, விளங்குபுகழ்க்
            கொண்பெருங் கானத்துக் கிழவன்
            தந்தார் அகலம் நோக்கின மலர்ந்தே   (புற : 155)
                                                                       
என்ற வரிகளின் வழி அறிய முடிகின்றது.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வா யெல்லாஞ் செயல்   (திரு: 33)

என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே வான்புகழ் வள்ளுவர் கூறிச் சென்றுள்ளார். இக்குறள், ஒருவன் தன்னால் இயன்றவரையில் அறச்செயலைத் தக்க இடங்களிலெல்லாம் இடைவிடாது செய்ய வேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்துகிறது.(எம் சிவசுப்ரமணியன். 2011. திருக்குறள் தெளிவுரை) இக்குறளின் விளக்கத்திற்கேற்பவே கொண்கானங் கிழானும் தன்னால் இயன்ற அறச் செயல்களைப் பாணர்களுக்குச் செய்து வந்தான். சுருங்கக்கூறின் கொண்கானங் கிழான், பாணர்களைக் காக்கும் வள்ளலாகவே திகழ்ந்தான் என்று கூறினால் அது மிகையாகாது.


3.0 முடிவுரை
இவ்வாறு புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடல் 154, 155, 156 ஆகியவற்றில் புலவர் மோசிகீரனார் கொண்கானங் கிழானது கொடைப் பண்பினை உலகுக்கு உணர்த்தியுள்ளார். குடிகளைக் காப்பதும் ஈகை நெஞ்சம் கொண்டவனாக இருத்தலுமே நல்லதொரு தலைவனது மாண்பு என்பதை இப்புறநானூற்று பாடல்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. இக்கருத்துகள் அன்று மட்டுமின்றி என்றென்றும் ஆட்சியாளர்களாலும் தலைவர்களாலும் பின்பற்ற வேண்டியவையாக விளங்குகின்றன என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ஒவ்வொரு ஆட்சியிலும் அறம் ஈகையாகவும் நீதியாகவும் காக்கப்பட வேண்டும்.

  பிற உயிர்களுக்கு உதவுவதும், துன்பம் செய்யாமையுமே அறம் ஆகும். அவ்வாறுபிறர் துன்பம் போக்கும் பண்பு இல்லாத தலைவர்கள், எக்காலத்திலும் மக்களது அன்புக்கு ஆளாக இயலாது. பலவாறு மோசிகீரனரால் சிறப்பிக்கப்பட்டுள்ள கொண்கானங் கிழான் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தலைவனாகவே புறநானூற்றுப் பாடல்களில் வலம் வருகின்றான். இதையே பொய்யாமொழிப் புலவரும்,
கொடையாளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி    (திரு:390)

என்று கூறியுள்ளார். கொடை, அன்பு, செங்கோல் முறை, குடிகளைக் காத்தல் ஆகிய நான்கு செயல்களையும் உடையவன் அரசர்களுக்கெல்லாம் ஒளி போன்றவன் .(எம் சிவசுப்ரமணியன். 2011. திருக்குறள் தெளிவுரை) என்ற பொருள் விளக்கத்தைக் கொண்ட இக்குறளும் ஒரு தலைவனுக்குத் கொடைத் திறம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை வலியுறுத்துகிறது. மக்களும் மன்னனும் நல்ல வழியில் வாழ சிறந்த எடுத்துக்காட்டாகவே கொண்கானங் கிழானது மூன்று பாடல்களும் புறநானூற்றில் திகழ்கின்றன.




துணைநூற்பட்டியல்

அ. ச. ஞானசம்பந்தன்.1956. அகமும் புறமும், சென்னை: பாரி நிலையம்

உ.வே. சாமிநாத ஐயர். 1956. எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய புறநானூறு மூலமும் உரையும், சென்னை : கபீர் அச்சுக்கூடம்
           
எம். சிவசுப்ரமணியன். 2011. திருக்குறள் தெளிவுரை, சென்னை: கமர்சியல் பதிப்பகம்

ஔவை சு.துரைசாமிப் பிள்ளை. 1996. புறநானூறு (1-200 பாட்டுக்கள்), சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

கா. கோவிந்தன். 1955. சங்ககால அரசர் வரிசை, சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
           

ராம.குருநாதன். 1999. புறநானூறு ஒரு புதிய பார்வை, சென்னை: வானதி பதிப்பகம்

ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை


‘நமசிவாய’ என்பது பகவான் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும்.
ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பற்றி தனது இரண்டு பதிகங்களில் சிறப்பித்து கூறியுள்ளார். அதைப் பற்றி அறியும் முன் ஐந்தெழுத்து மந்திரம் உருவான சூழலைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஐந்தெழுத்து மந்திரம் உருவான சூழல்
பொது திருப்பதிகம்
     பல தலங்கள் தோரும் சென்றடைந்து சிபபெருமானைத் தொழுத வண்ணம் இருந்த ஆளுடைப் பிள்ளைக்கு திருமணம் செய்விக்க எண்ணிய அவரது பெற்றோர் திருநல்லூர் பெருமணத்தில் நம்பியாண்டார் நம்பி என்ற சிவனடியாரின் திருமகளான சொக்கியை நிச்சயம் புரிந்தனர். எந்நேரமும் சிவனையே தொழுத வண்ணம் இருந்த திருஞானசம்பந்தருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லையெனினும், அனைத்தும் இறைவனது சித்தம் என்று பெற்றோரது முடிவிற்கு இசைந்தார். மண்ணோரும் விண்ணோரும் மற்ற யாவரும் இத்திருமணத்தை காண வந்திருந்தனர். அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்தியதால், மனிதரும் தேவராகத் திகழ்ந்தனர். பிறகு, இறைவனது சித்தப்படி, திருஞானசம்பந்தர் சொக்கியைக் கரம் பிடித்தவுடன், ‘இவளொடும் சிவனடி சேர்வள்’ என்று கூறி பொது திருப்பதிகத்தினைப் பாடி திருவைந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பரைசாற்றினார். அதன் பயனாய் திருமணம் காண வந்த அனைவரும் பிறவி பிணி நீங்கி ஈசனது திருவடியில் அழியா இன்பத்தை எய்தினர். பின்பு, திருஞானசம்பந்தரும் அவரது துணைவியாரோடு இறைவனடி சரன் புகுந்தார்.

பஞ்சாக்கரத் திருப்பதிகம்
     திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்ய விரும்பினார் சிவபாத இருதயார். அந்த உபநயனச் சடங்கில் ‘மறை நான்கும் தந்தோம்’ என்றனர் அந்தனர். அப்பொழுது மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது உலகின் முழுமுதற் கடவுளின் திருவைந்தெழுத்தான ‘நமசிவாய’ என்னும் மந்திரமே என்ற பேருண்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் இப்பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடினார் ஆளுடைப் பிள்ளையார்.




மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள 49வது திருப்பதிகமானது பொது நமச்சிவாயத் திருப்பதிகமாகும். இத்திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ மந்திரத்தின் மகிமையை மொத்தம் பத்து பாடல்களில் இவ்வுலகிற்கு எடுத்துணர்த்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

      முதலாவதாக, மனித வாழ்வில் பிறவியெடுக்கும் ஆன்மாவிற்கு இவ்வுலகில் வாழ கிடைக்கப்பெற்றிருக்கும் உடலானது நிறந்தமற்றதாகும். அழிய கூடிய தன்மை கொண்ட உடலில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவிற்கு, நிச்சயமாக அப்பூதவுடல் பேரின்பத்தை அதாவது அழிவில்லாத இன்பத்தை வழங்கும் தன்மை கிடையாது. ஓர் ஆன்மா சென்று அடைய கூடிய இறுதி எல்லை அதாவது முக்தி எனப்படுவதே சைவ சமயத்தில் பேரின்பம் எனப்படுகிறது. இவ்வாறு ஓர் ஆன்மாவிற்கு முக்தி பேறு கிட்ட வகை செய்யும் மந்திரமே ஐந்தெழுத்து மந்திரம் என்று ஆளுடைப் பிள்ளை இப்பதிகத்தில் பாடியுள்ளார். பிறவாமையை மீண்டும் அடையாமல் இறைவனது திருவடிப் பேற்றை முக்தியின் வழி அடைய நாம் கூற வேண்டிய மந்திரம், வேதங்களின் நாயகனான சிவபெருமானதும் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமாகும் என்ற கருத்தை, திருஞானசம்பந்தர், இப்பதிகத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலில்

“காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
      ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது”

என்ற வரிகளின் மூலம் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

      அடுத்ததாக, இறைவனது திருப்பாதங்களைத் தொழுது அவனையே சிந்தையில் பதித்து, நம்பி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அம்மந்திரம் புதுமலரிலிருந்து கிடைக்கப்பெறும் தேனைப் போன்று இனிமையானதாக விளங்கும். ஐந்தெழுத்து மந்திரமானது சுத்தமான உயர்ந்த பொன்னைப் போன்றது என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். எவ்வாறு நாம் இடும் திலகம் நமது நெற்றியின் மையப்பகுதியில் வீற்றிருக்கின்றதோ, அதே போன்று நம் வாழ்விற்குப் பிரதானமாக மையப்பகுதியில் வீற்றிருக்கும் தன்மை உலக நாயகனான சிவனது ஐந்தெழுத்து மந்திரம் ஆகும், என்ற கருத்தினை,

      “ செம்பொ னார்தில கம்உல குக்கெலாம்
      நம்பன் நாமம் நமச்சி வாயாவே”

என்ற திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளின் மூலம் தெள்ளத் தெளிவாக உணர முடிகின்றது.

      அதுமட்டுமின்றி, திருஞானசம்பந்தர் தமது பாடலின் வழி, மானிட பிறவியினரானாலும், அவர்கள் உள்ளம் உருக, மனம் நெகிழ, சித்தமெல்லாம் சிவமயமாய் திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து வருபவர்களாயேனால், அவர்க்ளும் வானுலகத்தை ஆளும் தேவர்களாகும் தகுதியைப் பெறுவர் என்று கூற விழைகிறார். இது,

      “ தக்க வானவ ராத்தகு விப்பது
      நக்கன் நாமம் நம்ச்சி வாயவே”

என்ற பாடல் வரிகளின் மூலம் சுட்டப் பெறுகின்றது.

      மேலும், ‘நமசிவாய’ என்ற நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானது ஐந்தெழுத்து மந்திரத்தை மனம் உவந்து விரும்பி உச்சரிக்கக்கூடிய சிவனடியார்களை எமனும் எமனது தூதர்களும் கூட நெருங்க அஞ்சுவர் என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை, திருஞானசம்பந்தர்,

      “ இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
      நயம்வந்து ஓதவல் லார்தமை நண்ணினால்”

என்ற பாடல் வரியின் வழி நயம்பட எடுத்துரைத்துள்ளார்.

      எல்லோருக்கும் நன்மையையே புரியும் சிவபெருமானது திருநாமமானது ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தாகும். இம்மந்திரத்தை ஏதாவதொரு பூர்வ நல்வினையின் பயனாக உச்சரிக்க நேருமேயேனால், கொலைதொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், எந்த விதமான நற்குணங்களும், நல்லொழுக்கங்களும் இல்லாதவர்கள் ஆயினும், அவர்கள் பாவங்கள் நீங்கி நன்மைகள் கிட்டும். அந்த அளவிற்கு மகிமை வாய்ந்தது இத்திருவைந்தெழுத்து மந்திரம் என்று ஆளுடைப் பிள்ளையார்,

      “கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
      இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
      எல்லாத் தீங்கயு நீங்குவ ரென்பரால்
      நல்லார் நாமம் நமச்சி வாயவே”

என்ற பாடலின் வழி உலக மக்களுக்கு எடுத்துணர்த்தியுள்ளார்.

      இதைத்தவிர, திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பவர்கள், மலை அளவு பாவங்கள் செய்தவர்களாக இருப்பினும், அவர்களுடைய பாவங்கள் நீங்கப்பெறும். அதோடு, பந்தப் பாசத்தால் பிணைக்கப் பெற்றவர்களும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால், பீடிக்கப் பட்டிருந்தாலும் அவர்களது அறியாமை நீங்கப் பெற்று, எல்லையில்லா செல்வமான வீடு பேறு செல்வத்தை அவர்களுக்கு அளிக்கக் கூடிய மகிமையைக் கொண்டது நந்திதேவனை வாகணமாகக் கொண்ட ஈசனது ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மதிரமாகும். இது,

      “ மந்தரம் அன பாவங்கள் மேவிய
      பந்த னையவர் தாமும் பகர்வரேல்
      சிந்தும் வல்வினை செலவமும் மல்குமால்”

என்ற வரியின் வழி உணர முடிகின்றது.

     இதைத்தவிர, சிவனடியார்கள் கேட்கும் வரங்களைத் தரும் சிவபெருமானின் திருவைந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்ற மந்திரத்தை ஓதுபவர்கள் ஏழு நரகங்களுக்குச் செல்லக்கூடிய அளவிற்குப் பாவிகளானாலும், அவர்கள் தங்கள் தீவினைக்கு ஏற்ற தண்டனையை அடைய மாட்டார்கள். அவர்களது பாவங்கள் யாவையும் மன்னித்து, அவர்களை உருத்திர கணத்தாரோடு சேர்த்து சிவபதவியை அடையச் செய்யும் மகிமை இத்திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு உண்டு என்பதனை,

      “நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
      உரைசெய் வாயின ராயில் உருத்திரர்
      விரவி யேபுகு வித்திடும் என்பரால்”

என்று திருஞானசம்பந்தர் தமது பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகின்றது.
     
      இலங்கை வேந்தன் இராவணன், ஆணவங்கொண்டு, தமக்கு வரமளித்த ஈசனையே சீண்டி பார்க்கும் விபரீத விளையாட்டில் ஈடுபட எண்ணம் கொண்டு, ஈசனது இருபிடமான கையாலய மலையை அப்படியே பெயர்த்தெடுத்து, தன் தோள் பட்டையில் வைத்துக் கொள்ள முயன்ற போது, அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு, ஈசன் தனது காற்பெருவிரலை ஊன்றவும் கையிலை மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டான் இராவணன். அவன் அலறி, புலம்பி மன்றாடியபோதும் அத்துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்காத இராவணனுக்கு, அவன் திருவந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த போது சிவபெருமானிடமிருந்து உய்வு கிட்டியது. இதிலிருந்து தீவினையின் காரணமாக துன்பமுற நேரிட்டாலும் அதிலிருந்து நம்மை விடுபட வைக்கும் மகிமை திருவந்தெழுத்து மந்திரத்திற்கு உண்டு. இவ்வுண்மை,

      “ இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
      தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
      மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை

என்ற ஆளுடைப் பிள்ளையாரின் பாடல் வரிகளிலிருந்து மிளிர்ந்து காணப்படுகின்றது.

      படைக்கும் தொழிலைச் செய்யும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், காக்கும் தொழில் புரியும் தாமரை மலர் கண்களுடைய திருமாலும், தங்களில் சிறந்தவர் எவர் என்று நிர்மானிக்கும் பொருட்டு, சிவபெருமானது திருப்பாதத்தையும் திருமுடியையும் தொடும் விஷப்போட்டி ஒன்றில் ஈடுபட முனைந்தனர். எனினும் எவ்வளவு முயன்றும் அதில் வெற்றி காண முடியாத இருவரும், தங்கள் தவற்றை எண்ணி வருந்துய போது, அவர்களுக்கு நல்லறிவு கிட்டி உய்வு கிட்ட வழிவகை செய்தது பரம்பொருளின் திருநாமமான ‘நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். இப்புராண குறிப்பினை, திருஞானசம்பந்தர் தமது பாடலில், கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

      “பாதந் தான்முடி நேடிய பண்பராய்
      யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
      ஓதும் நாமம் நமச்சி வாயவே”

எல்லாம் வல்ல சிவபெருமானது திருவந்தெழுத்தை ஓதுவதற்கும் பேறு பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மை, இப்பதிகத்திலுள்ள பாடல் ஒன்றின் வழி அறிய முடிகின்றது.

      “கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
      வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
      விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுதுசெய்
      நஞ்சுஉள் கண்டன் நமச்சி வாயவே”

தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி நஞ்சையுண்ட இறைவன் ஈசனது திருநாமமான ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் பேற்றினை, மண்டை எனும் பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் பௌத்தர்களும் கைகளையே மூலமாகக் கொண்டு பிச்சை எடுத்து அதில் உணவு புசித்து உயிர் வாழும் சமணர்களும் கொடுஞ்சொல் பேசி திரியும் சாக்கியர்களும் பெற்றிலர் என்பதை இப்பாடல் வரிகள் மிகத் தெளிவாக எடுத்துணர்த்தியுள்ளது.

      இறுதியாக,

      “நந்தி நாம நமச்சிவா யவெனும்
      சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
      சிந்தை யால்மகிழ்ந்து ஏத்தவல் லாரெலாம்
      பந்த பாசம் அறுக்கவல் லார்களே”’

என்ற இக்கடைக்காப்பில், நந்தி என்ற மற்றுமொரு பெயரைக் கொண்ட சிவபெருமானது திருவைந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்ற மந்திரத்தின் மகிமையை உணர்த்தும் வண்ணமாக, அழகிய சந்தம் கொண்டு ஆளுடை பிள்ளையாரால், ஓதப்பெற்ற இத்திருப்பதிகத்தை ஓதி வருபவர்களுக்கு எல்லையில்லா இன்பமான வீடு பேறு கிட்டும் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளாது.

      சுருங்கக்கூறின், சிவனது திருநாமமான ‘நமசிவாய’ என்ற திருவைந்தெழுத்து மந்திரம் எல்லையில்லா மகிமையைப் புரியும் ஆற்றல் கொண்டது என்பதனை திருஞானசம்பந்தர் இப்பதிகத்தில் எழுந்தருளியுள்ள பத்து பாடல்களின் வழி மிகத் தெளிவாக உணர்த்தி சென்றுள்ளார். ஆன்மாவின் இலக்கு எல்லையில்லா இன்பமான முக்தி பெறுதலே என்பதும், அதற்கு வழி வகுப்பது ‘நமசிவாய’ எனும் இத்திருவைந்தெழுத்து மந்திரமே என்பதும் இப்பதிகத்தில் மிகச் சிறப்பாக எடுத்து கூறப்பட்டுள்ளது. உலகியல் இன்பங்களையே பெரிதாக எண்ணி வாழும் மானிட பிறவியினருக்கு, ஆன்மாவின் உண்மை இலக்கு என்ன என்பதனை வலியுறுத்தி காட்டி, மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், படிப்பினையாகவும் இத்திருப்பதிகம் விளங்குகிறது என்றால், அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

முன்னர் கண்டது போல, திருஞானசம்பந்தர் தமது மற்றுமொரு திருப்பதிகத்திலும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளார். மூன்றாம் திருமுறையில், 22வது திருப்பதிகமான பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை உற்று நோக்கினோமேயானால், அதிலும் ஆளுடைப்பிள்ளையார் ஐந்தெழுத்து மந்திரத்தையே மேன்மை படுத்தி கூறியுள்ளார் என்பது மிகத் தெளிவாகப் புரிய வரும்.

      முதலாவதாக, ஈசனது திருவைந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ எனும் மந்திரத்தை ஓதுபவர்கள் எமவாதை நீங்கப் பெறுவர் என்று திருஞானசம்பந்தர்,

      “வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
      றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே”

என்ற வரிகளின் மூலம் எடுத்துரைத்துள்ளார். இப்பாடலை நன்கு உற்று நோக்கினோமேயானால், மனதில் வஞ்சகமின்றி இறைவன் சிவபெருமானது திருவடியையே துதித்து வந்த மார்க்கண்டேயரது வாழ்வில் புக முயற்ச்சித்த எமனையே துரத்தியது ஈசனது திருவந்தெழுத்து மந்திரம் தான் என்ற புராணக் குறிப்பு ஒன்று புலப்படுகின்றது.

      அதுமட்டுமின்றி, வேதம் நான்கிலும் மறைகளிலும் மூல மந்திரமாக கருத்தப்படுவது திருவைந்தெழுத்து மந்திரமே என்ற செய்தியும் இத்திருப்பதிகத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றையே கற்று மூன்று வேளையும் வேதியர்கள் ஓதும் மந்திரமும் இதுவேயாகும். இதிலிருந்து மந்திரங்களுக்கெல்லாம் முதல் மந்திரமாக விளங்குவது சிவனது ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரமே என்றால் அது மிகயாகாது.

      “ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
      ஞான விளக்கினை யேற்றி நன்புலத்”

என்ற வரிகளின் மூலம் உடல், உயிர் எனப்படும் மூச்சுக் காற்று, நல்லறிவு ஆகிய அனைத்தையும் ஒருமிக்கச் செய்து தியான நிலையை அடைந்து உலக மக்களுக்கு ஞானம் கிட்ட வழி வகுப்பது ‘நமசிவாய’ எனு ஐந்தெழுத்து மந்திரத்தையன்றி வேறு ஏதுமில்லை என்று ஆளுடைப் பிள்ளையார் மொழிகின்றார்.

      அடுத்ததாக, நல்லவராயினும், தீமைகள் புரியும் பாவியரானாலும் அவர்கள் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பார்களேயானால், அவர்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டாமல், ஆன்மாவிற்குத் துன்பம் தரும் மலங்கள் நீங்கப் பெற்று முக்தி கிட்ட வழி வகுப்பது இறைவனது திருநாமமான ஐந்தெழுத்து மந்திரமின்றி வேறில்லை என்று ஆணித்தரமாக திருஞானசம்பந்தர் தமது பாடலில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், சாகும் தருவாயில் இம்மந்திரத்தை உச்சரித்தாலும் கூட எமவாதை நீங்கப் பெறும் என்றும் இவர் மொழிந்துள்ளார்.

      மேலும், காதல் கடவுளாகக் கருத்தப்படும் மன்மதனின் எய்யும் மணமிக்க மலருடைய அம்பு ஐந்தாகும்; இவ்வுலகையே தன்னகத்துள் அடக்கி வைத்துள்ள பஞ்ச பூதங்களும் மொத்தம் ஐந்தாகும்; இறைவனது திருமேனியில் அணியாக உள்ள பாம்பின் படமும் ஐந்தே; மந்திரத்தை உச்சரித்து ஜெபிப்பவர்களது கையிலுள்ள விரலும் ஐந்துதான்; இவற்றுக்கொப்பாக ஈசனது திருநாமமான ‘நமசிவாய’ எனும் மந்திரமும் ஐந்தெழுத்து சொற்களாக விளங்குகின்றன என்று ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை திருஞானசம்பந்தர் விளக்குகிறார்.

      அதைத் தவிர, தும்மலும் இருமலும் உடலை வருத்தும் போதோ, அல்லது தீவினைப் பயனாகத் துன்பம் விளையும் சமயமோ ஊழ்வினைகள் அச்சுருத்தும் போதோ இப்பிறவியில் நாம் ஓயாது உச்சரிக்கும் ஐந்தெழுத்து மந்திரம் துணை நிற்கும். இப்பிறவியில் மட்டுமின்றி, இம்மந்திரம் தொடர்ந்து வரும் பிறவிகளிலும் உறுதுணையாக விளங்கும் ஆற்றலுடையது. அத்தனை சிறப்பு வாய்ந்தது ஈசனது ஐந்தெழுத்து மந்திரம் என்று மந்திரத்தின் மகிமையை இத்திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

      “வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
      பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்”

என்ற வரிகளிலிருந்து, ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் சிவனடியார்களுக்கு வீடு பிறப்பு கெட்டு, அதாவது நிறந்தமற்ற உலகியல் இன்பங்களிலிருந்து விடுப்பு கிட்டி, நிலையான இன்பமான ‘முக்தி’ கிட்ட வகை செய்வது பரம்பொருளின் திருநாமமான ஐந்தெழுத்து மந்திரம் தான் என்று அறிய முடிகின்றது.

      அதேவேளையில், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் திருத்தொண்டர்களுக்கு, அண்டங்களையெல்லாம் அரசாளும் பேறும் தகுதியும் கிட்டுகிறது என்றும் ஆளுடைப் பிள்ளையார் குறிப்பிட்டுள்ளார்.

      சிவனது திருநாமமான ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமானது அதை தொடர்ந்து உச்சரித்த வண்ணமாகவே இருக்கும் பித்தர்களுக்கு பெருமையைச் சேர்க்கும் தன்மையுடையது ஆகும். இச்செய்தியை,

      “பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
      ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே”
என்ற வரிகளின் வழி அறிய முடிகின்றது.

      இறுதியாக,
      “ வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
      அத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே”

என்ற வரிகளின் மூலம், திருநீறு அணிந்து ஐந்தெழுத்தை உச்சரிப்பவர்களுக்கு தீவினையை விலகச் செய்யும் தன்மை ‘நமசிவாய’ மந்திரத்திற்கு உண்டு என்று அம்மந்திரத்தின் பெருமையையும் மகிமையையும் ஆளுடைப் பிள்ளையார் உலகிற்குப் பறைசாற்றியுள்ளார்.

      சுருங்கக்கூறின், சிவனது திருநாமமான ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை வெறும் வார்த்தைகளால் மட்டுமே அளவிட்டு கூறி விட முடியாது. எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் அருள் புரிய வழி வகைச் செய்யும் மந்திரம் இம்மந்திரம் என்றால் அதை மறுப்பாருமில்லை.