Thursday, February 9, 2012

கடவுள் இருக்காரா இல்லையா?? நம்பலாமா நம்ப கூடாதா???


கடவுள் இருக்கின்றார்.. கண்ணுக்குத் தெரியவில்லை...
புகழ்பெற்ற பாடல் வரிகள் இவை...

கண்ணில் படுவது அனைத்தும் உண்மையுமில்லை..கண்ணுக்குத் தெரியாதவை பொய்யுமில்லை...இதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்களா??? ஏற்றுக் கொண்டால் கடவுள் இருக்கின்றார் என்ற தற்காலிக ஆதாரமாகக் கொள்ளப்படும் கருத்து (hypothesis) ஒன்றை வைத்துக் கொள்வோம்..

விண்ணையும் மண்ணையும் படைத்தவன் இறைவன்.பல அவதாரங்கள் எடுத்து அவதார புருஷன் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டவன்.இப்படி காலங்காலமாக நாம் புராணங்களிலும் இதிகாஅங்களிலும் படித்தும், பிறர் வாய் மொழி கேட்டும் அறிந்திருப்போம். எனினும்,இவ்வுலகைப் படைத்தவன் இறைவன் என்ற கூற்று ஏற்று கொள்ளப்பட்டால்,நிச்சயமாக பல இறைவன் வலம் வர வாய்ப்பில்லையே..ஒரே ஒருவன் மட்டும் தானே இங்கு வழிபாட்டுக்கு உரியவனாக விளங்க முடியும்?எளிதில் விடை காண முடியாத சர்ச்சைக்குரிய கேள்வி இது..

நம்மில் பலர்,  இறைசக்தி ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அந்த இறைசக்தி தங்கள் சமயமே என்று எண்ணி வருகின்றனர். இதுவும் எளிதில் தீர்த்து வைக்க முடியாத சர்ச்சையாகும்.


ஆனால், நன்றாக ஆராய்ந்தோமேயானால், எல்லா மதங்களின் அடிப்படை கோட்பாடுகளும் ஒன்றுதான். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மதங்கள் குறித்த சர்ச்சைகள் நேர விரயத்திற்கே இட்டுச் செல்கின்றது.

அன்புதான் இறைவன் என்று ஏக மனதோடு  எல்லா சமயமும் ஏற்று கொண்டுள்ளது.அன்பே சிவம் என்பதை இந்து மதமும் கூறியுள்ளது. அன்ப செலுத்துமிடத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனுள்ளும் தெய்வத்தன்மை குடி கொண்டுள்ளது. பிறர் துன்பம் கண்டு வருந்துபவன் மனிதன். அத்துன்பத்தைப் போக்குபவன் இறைவனாகக் கருதப்படுகின்றான். உதாரணமாக, உயிருக்குப் போராடும் கணவனை வைத்தியம் பார்த்து பிழைக்க வைக்கும் மருத்துவர் அம்மனைவிக்குத் தெய்வமாகக் காட்சியளிக்கிறார்.உண்ண  உணவில்லாமல் பசியால் வாடும் ஏழைக்கு ஒரு வேளை உணவளித்தாலும் நாமும் அந்த ஏழைக்குத் தெய்வமாய் திகழ இயலும்.

நம்மை எதோ ஒரு சக்தி இயக்குகின்றது என்பதை அறிவியலாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.அச்சக்தி இறைவனா இல்லையா என்பதை எத்தனை காலம் வாதிட்டாலும் விடை காண இயலாதுதான்.ஆனால், மத துவேஷமும், வெறியும் இருப்பது தவறுதானே? நம்மிடம் இருக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்தினாலே போதுமே...இங்கேயே சொர்க்கத்தை அமைக்கலாமே...

இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே இறைவன் இருக்கிறானா இல்லையா??

3 comments:

  1. இறைவன் இருக்கிறான்.தென்றலைப்போல் கண்ணில் படாமல்,சந்தோஷப்படுத்துகிறான்,சமயத்தில்.சூறாவளியாய் சங்கடப்படுத்துகிறான்......இரண்டுக்கும் காரணம் இருக்கும் ஆனால் யாருக்கும் தெரியாது.

    ReplyDelete