Sunday, February 12, 2012

காரியம் முதல் கடவுள் வரை

ஞாயிறு (31.07.2011) அன்று உறவினர் பாட்டி அவர்கள், இறந்தற்கான சாங்கியம் வைத்திருந்தார்கள். (இங்கு வழக்கில் இவ்வாறு கூறுவதுண்டு, சில இடங்களில் / மக்களைப் பொருத்து காரியம் என்று சொல்வார்கள்) உறவினர்கள் வருவார்கள், நானும் சென்றிருந்தேன்.

சுமார் 10 மணிக்கு சுடுகாட்டிற்கு சென்று முதலில் சில சடங்குகளை செய்துவிட்டு பின் வீட்டிற்கு வந்து சிலவற்றை செய்வார்கள். வீட்டிலிருந்து சுமார் 1 - 2 கிலோ மிட்டர் தொலைவு, நான், அண்ணன் மாமா அவர்களுடன் பேசிக்கொண்டு சென்றேன். பிரதான சாலையிலிருந்து, பிரிந்து ஒரு தடத்தின் வழியாக கானாங்க்காடு வந்து சேர்ந்தோம்.

என்னுடன் சேர்த்து 9 பேர் சுடுகாட்டின் சுவருக்கு (Compound) வெளியே ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தோம், எங்களைப் போன்று இன்னொரு குருப் அங்கங்கு நின்று கொண்ருந்தார்கள், சிலர் உள்ளே சென்று சடங்குகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கெதிரே சுவரின் ள்ளே ஒரு சின்ன கொட்டகை(Shed) ரதம நின்றுக் கொண்டிருந்தது (இதற்க்கு சொர்க ரதம் என்று பெயர்). அந்த நிழலில், திண்ணையில் இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள்.


அதை அடுத்து சற்று பெரிதாக நீளமாக காட்சி அளித்த செயற்கை புற்றைப் பார்த்து மாமா ஒருவர் “பெருசா மண்ணுல செஞ்சிருக்காங்கன்னு” என்று சொன்னார் (இங்கு எழுதயுள்ளதை அவ்வாறே சொல்லவில்லை, அதற்க்கு இனையான பொருளில் கூறினார்) அந்த புற்றின் மேல் ஐந்து சிறிய தலை கொண்ட நாகம் / பாம்பு இருக்குமாறு ஒரு உருவம் தகரத்தில் செய்து சொருகப்பட்டிருந்தது, காற்றிற்கு அது முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது.

அதில் யாரோ ஒருவர், எல்லாம் இங்கேயே நின்னுட்டிங்களே உள்ள போய் என்ன செய்யறாங்கன்னு பார்க்கிறது, என்றார். என் தாத்தா அதெல்லாம் அவங்களுக்கு பிடிக்குமா என் சிரித்துக் கொண்டு சொன்னர், நான் அவரிடம், நீங்க தான் விருப்பமா பார்ப்பீங்களே, ஏன் வெளியவே நிக்கறீங்கன்னு சொன்னேன், நாங்கெல்லாம் இந்த மாதிறி நிறைய பார்த்துட்டோம் ன்னு சொன்னார்.


நான், இன்னும் பத்து வருஷத்துல, இந்த மாதிறி சடங்கெல்லாம் குறைஞ்சிடும், இறந்த அன்னைக்கே அடக்கம் பண்ணிட்டு, அன்னைக்கே சில சடங்கெல்லாம் முடிச்சிடுவாங்க, மறுபடியும் இன்னொரு நாள்ன்னு இழுக்கமாட்டாங்கன்னு சொன்னேன். அதுக்கு ஒரு மாமா, நீ வேற நம்பாளுங்க தான் எவ்வளவோ குறைச்சிட்டாங்க, இன்னும் எவ்வளவோ சமூகத்துல, அவங்களுகானத செய்யறத செஞ்சுக்கிட்டு தான் இருக்காங்க. ஆத்துக்கு, எங்காயாவது போய் திதி கழிக்கிறது, வருஷ வருஷம் படைக்கிறது எல்லாம் செஞ்சுக்கிட்டு தான் இருக்காங்க, நம்பாளுங்க தான் எல்லாம் குறைச்சிட்டாங்கன்னு சொன்னார். இன்னொரு மாமா (அவரின் தம்பி) ரகுநாத்து திருவண்ணமலை கிரிவலத்துக்கு வருபவங்க அதிகமாயிட்டு தான் இருக்கு, 10 வருஷத்துக்கு முன்னாடி இருந்த கூட்டத்த விட இப்ப எத்தன மடங்கு அதிகமாயிடுச்சு, அதுக்கு என்ன சொல்லற என்றார், நான் மக்கள் தொகை அதிகமாகிட்டு இருக்குதுள்ள, ஆனா எவ்வளவு மக்கள் தொகை அதிகமாகியிருக்கு, அத விட கூட்டம் அதிகமாக வருதுன்னு சொன்னார். அக்ஷ்ய த்ருதி எவ்வளவு காலமா இந்த மாதிறி மக்கள் கிட்ட அதிகமா பரவியிருக்கு என்றேன், அதற்க்கு ஒருவர் அது நகைக்கடைகாரர்களின் வியாபார யுக்திகள் என்றார்கள், அதே தான் இதெல்லாம் ஒரு வியாபார பரப்புரை (Propaganda)

பாருங்க ஒருத்தர், கோவையில் ஒருவர் நோட்டீஸ் அடிச்சு வச்சுக்கிறார், இந்தந்த கோவிலுக்கு சென்று இந்தந்த பரிகாரம் செய்ய வேண்டும், முழுத் தகவல். பல பேருக்கு இது தான் பொதுவான பரிகாரமாக வருகிறது, இது Propaganda தானே, வேலூர் பொற்கோவில் ஒரு பெரிய பரப்புரை. இதற்கிடையில் ஒருவர் வாஸ்து பற்றி குறிப்பிட்டார், எவ்வளவு காலமா இருக்கு என்றார். பாருங்க புதுமனை புகுவிழா (கிரவப்பிரவேஷம்) அன்னைக்கு காலையில ஒரு பூஜை செஞய்வாங்க, வாஸ்து பிரபலமாகியும், இந்த பூஜை மட்டும் தான் பார்த்தேன். பக்கமா நம்ம உறவினர் வீட்டு கிரவப்பிரவேஷத்துல, அதுக்கு முந்தைய நாள் இரவு, வாஸ்து பூஜைன்னு புதுசா நுழைஞ்ச்சிருக்கு, ஒருமுறை போனபோது, இந்த வாஸ்து பூஜையில் மந்திரம் சொல்லறவர் கூறியது(தமிழ்ல தான் அவர் செய்தார்)

எல்லாம் வாஸ்து படி பார்த்து குறையில்லாம வீடு கட்டியிருக்கோம், அதையும் தாண்டி ஏதாவது குறை இருந்துச்சுன்னா, இந்த பூஜை அதனை நிவர்த்தி செய்யும், செய்யுமாறு வேன்டிக் கொள்வோம். - ( Amen ;) )

இதுல இப்ப வாஸ்து கல்ர்ன்னு பெயிண்ட் அடிக்கறாங்க, பக்கத்து பக்கத்துல அடிக்கற (total contrast) மாதிறி ஒவ்வொரு வண்ணம்.


மாமா என்னிடம், இப்ப எல்லாம் அதிகமாகிட்டு வருதா இல்லையா, அதிகமாகிகிட்டு தான் போகுதுன்னு சொன்னார். அக்காவின் கணவர், என்னிடம் நகரத்து வாழ்க்கையில இதெல்லாம் குறைஞ்சுக்கிட்டு வரும், இங்கிருக்கத்தான் செய்யும் என்றார்.


அண்ணன் அருகில், ஏன் மாமு எத செய்யறமோ இல்லையோ, இத கம்பல்சரியா செய்யனும், அப்படித்தானே என்று கேட்டார், அதாவது இறந்த பின் செய்யும் காரியம். அதைத் தொடர்ந்து வந்த பேச்சுக்களில், காசில ஆத்துல குளிக்கறாங்க எத்தனையோ பிணம் கரை சேருதுன்னு இப்ப கூட பக்கமா, பேப்பர்ல படிச்சேன், அத தான் அவன் புனித நீர் / தீர்த்தம்ன்னு சொல்லறான் என்று வேறொரு மாமா கூறினார். அண்ணன், அதுல குளிச்சா மறுபிறவி கிடையாதுன்னு, சொல்லறாங்க எனக் கூறினார்.

நான், மன உளவியலின் அடிப்படையில் ஆசை / நிறைவேறாத ஏக்கம் தான், மறுபிறவி என்னும் விருப்பத்திற்க்கு / நம்பிக்கைக்கு காரணம்ன்னு சொன்னேன். சில உதாரணமும் சொன்னேன். யாரும் ஏதும் சொல்லவில்லை, எல்லாரும் கலகலப்பாக தான் பேசிக்கொண்டிருந்தோம்.

அதில் ஒரு மாமா, ஏன் ரகுநாத்து, உனக்கு இந்த சடங்கு எதுலையும் உடன்பாடு இல்ல என்று வினவி, உன் கல்யாணத்துல, உன்ன புடிச்சு உட்காரவச்சு எல்லா சடங்கையும் ஒன்ணுவிடாம செய்யனும்ன்னு கிண்டலடித்துக் கொண்டிருந்தார். அண்ணன், மாமா எல்லோரும் அதை வழிமொழிந்து கிண்டல் செய்தனர்.

அதைத் தொடந்து / அதற்கிடையில், கோவிலுக்கு போறது, சாமி கும்பிடது அதெல்லாம் இல்ல அப்படின்னு என்னிடம் கேட்டார், கோவிலுக்கு போறதில்லன்னு இல்ல, இதோ இப்ப இங்க வந்திருக்கிற மாதிறி என்றேன், "அத விடு, நாங்க போய் சாமி கும்பிடுற மாதிறி, அப்படியெல்லாம் இல்ல" என்று கேட்டார், நடுவில் என் தாத்தாவுடன் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், (சுமார் 55 - 60 வயது இருக்கும், எனக்கு யாரென்று தெரியாது, உறவினருக்கு உறவு என்று வரும்.) சற்று உணர்ச்சிவசப் பட்டு என்னிடம்


ஒருத்தன் டாக்டர்கிட்ட போனாலும், டாக்டரே காப்பாத்துன்னு சொல்லாமா, ஏன் கடவுளே காப்பாத்துன்னு சொல்லறான். டாக்டர் கூட, எல்லாம் கடவுள் விட்ட வழி தான்னு, ஏன் சொல்லறார்ன்னு, கேட்டார்

நான், அவங்க அப்படி தாங்க சொல்லுவாங்க, அவங்களுக்கு நம்பிக்கை இருக்கு, அப்பறம் கடவுளே காப்பாத்துன்னு தான் சொல்லுவாங்கன்னு சொன்னேன். அவர் மீண்டும் அதே வாக்கியத்தை தொடர்ந்தார். அண்ணன்... டாக்டருங்க எங்க கடவுள் விட்ட வழின்னு சொல்லறாங்க எல்லாம் படத்துல தான் சொல்லறாங்கன்னு சொன்னார் :p

நான் மீண்டும் அதனயே கூறினேன், நம்பிக்கை இருக்கிறவன் அப்படி தாங்க சொல்லுவான், அவர் நான் சொல்லறத புரிஞ்சிக்கிறதா இல்ல. அவர் இந்த மாதிறி ஏதோ கேட்டு, கடவுள் இருக்கு என்னும் அவர் நம்பிக்கைய நிறுவனம் செய்யனும்.

சரி நான் கேட்டேன்....


அதுக்கு அவன் ஏன் டாக்டர் கிட்ட போகனும், வீட்லயே உக்காந்து கடவுளே காப்பாத்துன்னு சொல்ல வேண்டியது தானே
என்றேன், மீண்டும் அவருடைய கிளாசிக் வாக்கியத்த சொன்னார், நான் கேட்டது அவர் காதுல விழுல போலிருக்கு, மீண்டும் நான் சொன்னதை தெளிவாக கேட்டுவிட்டு, தொடந்து.... டாக்ரடர் என் உயிர காப்பாத்துங்க, நீங்க தான் கடவுள் ன்னு போய் மக்கள் விழுகறாங்களே, ஏன் ? என கேட்டுக் கொண்டிந்த போது...

மாமா ஒருவர், அப்ப உயிர யார் காப்பாத்தரானோ அவங்க தான் கடவுள் என்று சொல்ல, நான் இயல்பான பயம் தான் (Instinctive fear) கடவுள் மற்றும் அதைச் சார்ந்த நம்பிக்கைக்கு (மறுபிறவி உட்பட) அடைப்படையாக அமைகிறது என்றேன், அவர் அதன் பின் ஏதும் பேசவில்லை.

பின்பு வீடு திரும்பி விட்டோம், நாங்கள் சாப்பிட்டுவிட்டு நின்று பேசிக் கொண்டிருந்தோம், தாத்தா வந்து எங்களிடம், ஒரு விஷயமாயிடுச்சு, நானும் பங்காளி ஒருத்தரும் நடந்து வந்திட்டிருந்தோம், மெயின் ரோட்டுக்கு வரும் போது, வண்டி வந்து அவர் மேல மோதி, கீழ விழுந்து கையெல்லாம் அடின்னு சொன்னார், இப்ப தான் அவர ஹாஸ்பிட்டலுக்கு போக சொல்லிட்டு அவர் பொண்டாட்டிக்கிட்ட சொன்னேன், என்றார்.

அண்ணன், என்ன கொடுமையப்பா இப்ப தான் எல்லாரும் பேசிட்டு வரோம் அதுக்குள்ள இப்படியான்னு வருத்தப்பட்டார். நான தாத்தாவிடம், யார சொல்லறீங்க, எந்த பங்காளின்னு கேட்டேன். அண்ணன், அதான் உன்கிட்ட விவாதம் பண்ணனாறே அவர் தான், என்றார்.

பின் சிறுது நேரம் கழித்து சித்தப்பா, அவர் அடிப்பட்டதை அம்மா, சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது அவருடைய தப்பு தான், நான் அவர் பின்னாடி தான் வரேன், நானே பார்க்குறேன், ரோட்டுக்கு அந்த பக்கம் போய்விடலாம்ன்னு அவசரப் பட்டுட்டார், நல்ல வேள, எக்ஸ். எல் சூப்பரா போயிடுச்சு, பைக்கா இருந்து இன்னும் வேகமா வந்திருந்தான்னா, அடி இன்னும் பலமா இருந்திருக்கும், அப்பறம் கொஞ்சம் இந்த பக்கம் பட்டிருந்தா உங்க ஐயாவுக்கும் அடிபட்டிருக்கும் என்று அவர்களிடம் சொன்னார்.


அவர் அடிப்பட்டது அனுதாபத்துக்குறியது, அதனை முழுமையாக மதிக்கின்றேன். ஒரு வேளை நான் அடிப்பட்டிருந்தால், எனக்கு "நம்பிக்கைகள் இல்லாதது / உடன்பாடு இன்மை" தான் காரணம் என்று நினைப்பவர்களும் உண்டு, நான் அவர் அவ்வாறு நினைப்பார் என்று சொல்லவில்லை.

நான் நம்பிக்கைகளைப் பற்றி பேசிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் அடிப்பட்டிருந்தால், இதனால் தான் இவனுக்கு அடிப்பட்டது என்று நினைப்பவர்கள் / நம்பிக்கை உடையவர்கள் பலர் உள்ளனர்.


குறிப்பு: பதிவுகளை பரப்பார்வை யின் (Perspectives) அடிப்படையிலும் மற்றும் அதனின் பொருளில் (Actual Import / Interpretation) அணுகவும்.

மூலம்: திரு.இரகுநாத் ரத்னம்
https://www.facebook.com/note.php?note_id=175553635846864.

Thursday, February 9, 2012

கடவுள் இருக்காரா இல்லையா?? நம்பலாமா நம்ப கூடாதா???


கடவுள் இருக்கின்றார்.. கண்ணுக்குத் தெரியவில்லை...
புகழ்பெற்ற பாடல் வரிகள் இவை...

கண்ணில் படுவது அனைத்தும் உண்மையுமில்லை..கண்ணுக்குத் தெரியாதவை பொய்யுமில்லை...இதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்களா??? ஏற்றுக் கொண்டால் கடவுள் இருக்கின்றார் என்ற தற்காலிக ஆதாரமாகக் கொள்ளப்படும் கருத்து (hypothesis) ஒன்றை வைத்துக் கொள்வோம்..

விண்ணையும் மண்ணையும் படைத்தவன் இறைவன்.பல அவதாரங்கள் எடுத்து அவதார புருஷன் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டவன்.இப்படி காலங்காலமாக நாம் புராணங்களிலும் இதிகாஅங்களிலும் படித்தும், பிறர் வாய் மொழி கேட்டும் அறிந்திருப்போம். எனினும்,இவ்வுலகைப் படைத்தவன் இறைவன் என்ற கூற்று ஏற்று கொள்ளப்பட்டால்,நிச்சயமாக பல இறைவன் வலம் வர வாய்ப்பில்லையே..ஒரே ஒருவன் மட்டும் தானே இங்கு வழிபாட்டுக்கு உரியவனாக விளங்க முடியும்?எளிதில் விடை காண முடியாத சர்ச்சைக்குரிய கேள்வி இது..

நம்மில் பலர்,  இறைசக்தி ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அந்த இறைசக்தி தங்கள் சமயமே என்று எண்ணி வருகின்றனர். இதுவும் எளிதில் தீர்த்து வைக்க முடியாத சர்ச்சையாகும்.


ஆனால், நன்றாக ஆராய்ந்தோமேயானால், எல்லா மதங்களின் அடிப்படை கோட்பாடுகளும் ஒன்றுதான். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மதங்கள் குறித்த சர்ச்சைகள் நேர விரயத்திற்கே இட்டுச் செல்கின்றது.

அன்புதான் இறைவன் என்று ஏக மனதோடு  எல்லா சமயமும் ஏற்று கொண்டுள்ளது.அன்பே சிவம் என்பதை இந்து மதமும் கூறியுள்ளது. அன்ப செலுத்துமிடத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனுள்ளும் தெய்வத்தன்மை குடி கொண்டுள்ளது. பிறர் துன்பம் கண்டு வருந்துபவன் மனிதன். அத்துன்பத்தைப் போக்குபவன் இறைவனாகக் கருதப்படுகின்றான். உதாரணமாக, உயிருக்குப் போராடும் கணவனை வைத்தியம் பார்த்து பிழைக்க வைக்கும் மருத்துவர் அம்மனைவிக்குத் தெய்வமாகக் காட்சியளிக்கிறார்.உண்ண  உணவில்லாமல் பசியால் வாடும் ஏழைக்கு ஒரு வேளை உணவளித்தாலும் நாமும் அந்த ஏழைக்குத் தெய்வமாய் திகழ இயலும்.

நம்மை எதோ ஒரு சக்தி இயக்குகின்றது என்பதை அறிவியலாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.அச்சக்தி இறைவனா இல்லையா என்பதை எத்தனை காலம் வாதிட்டாலும் விடை காண இயலாதுதான்.ஆனால், மத துவேஷமும், வெறியும் இருப்பது தவறுதானே? நம்மிடம் இருக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்தினாலே போதுமே...இங்கேயே சொர்க்கத்தை அமைக்கலாமே...

இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே இறைவன் இருக்கிறானா இல்லையா??

Friday, February 3, 2012

தேர்வுக்கு முன்......

தேர்வுக்கு மாணவர்கள் எவ்வளவு தயார் நிலையில் இருந்தாலும், இறுதி நேரத்தில் அவர்களுக்கு தேவைப்படுவது மன அமைதி தான். அந்த அமைதிக்கு வித்திடும் நிகழ்வு தான் இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வாழ்த்து கூறும் வைபவமாகும். என் பள்ளியிலும் நாங்கள் தேர்வுக்குச் செல்லும் முன்பு இந்நிகழ்வு நடைபெற்றது. அக்காட்சியைத் தான் இங்கு பகிர்ந்துள்ளேன்.

Tuesday, January 31, 2012

கலாச்சார தூய்மைக்கேடு


பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்பது மூத்தோர் வார்த்தை.அடியோடு ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது பெண்ணினம்.சங்க காலத்தில் தலை நிமிர்ந்து நின்ற பெண்கள், பின்பு கால சுழற்சியில் சிக்கி ஒதுக்கப்பட்டிருந்தனர்.பெண்கள் பிறந்தால் அவர்களுக்குக் கள்ளி பால் கொடுத்து கொல்லும் அளவிற்கு நிலைமை மாறி இருந்தது.இந்நிலை அனைத்தும் மாறி இன்று வின்வெளிக்கும் சென்று வந்து விட்டனர் பெண்கள்.பெருமை கொள்ள வேண்டிய விஷயம் தான் இது.இப்படி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் பீடு நடை போட்டாலும்,வரைமுறைக்கு அப்பாற்பட்டும் பல செயல்களில் பெண்கள் சிலர் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.இது இன்றைய பெண்களின் துணிச்சலைப் பிரதிபலித்தாலும், இதில் பெருமை கொள்ள என்ன இருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் சற்று கூர்ந்து சிந்திக்க வேண்டும் என்பது என்னுடைய ஆழமான கருத்தாகும்.

பெண்ணியம் என்ற கோட்பாட்டைப் பற்றி பேசுவது சிலருக்குச் சுலபமாக இருக்கலாம். ஆனால், அக்கோட்பாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பது தவறு என்றே நான் எண்ணுகிறேன். ஆணுக்கு நிகராக எதையும் செய்வது தான் பெண்ணியம் என்றால், அது மிகப் பெரிய கருத்து பிழையாகும். பெண்ணியத்தில் அடிப்படையாக விளங்குவது சம உரிமை எனும் கோட்பாடு தான். அதாவது, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அங்கங்களில் பெண்களுக்கு சம உரிமையும் பங்கும் அளிப்பதே பெண்ணியம் எனும் கோட்பாட்டின் அடிப்படை தத்துவமாகும். எனினும், இதை உணராத சில புல்லுறுவிகளால், இக்கோட்பாடே இன்றைய சமூக சீர்கேட்டிற்கு வித்திடும் அளவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


நாகரிகம் நாகரிகம் என்று அநாகரிகத்தையும் நாகரிக பாணியாக்குவது எவ்விதத்திலும் நியாயமாகாது.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ,உடை, பேச்சு, பழக்க வழக்கங்கள் என்று பல கோணங்களில் இருந்து ஆராயலாம்.கற்கால மாந்தர்கள் முறையான ஆடை இன்றி வலம் வந்ததை நாம் குறை கூற இயலாது.எனினும், இக்காலத்தில் அதாவது நாகரிகத்தின் அபரிமித வளர்ச்சியில் இப்பிரச்சனை தலை தூக்குகின்றது என்றால்,யார் குற்றம் இது?சினிமா, ஊடகங்கள்,மேலை நாட்டு மோகம்,பெற்றோர் கவனிப்பின்மை,கூடா நட்பு என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைக்க இயலும்.ஆனால், இவை நியாயமாகப் படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.சிந்திக்கும் ஆற்றல் நமக்கு வழங்கப்பட்டுள்ள வேளையில்,பிறர் மீது பலி சுமத்துவது அபத்தமானது.நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றல் உள்ள நாம், அதை நிஜ வாழ்வில் செயலாற்றுவதுதான் மிகவும் குறைந்து விட்டது.

உலகிற்கு நாகரிகம் கற்று தந்து தலை நிமிர்ந்து நின்ற மரபின் தற்கால தலைமுறையா இன்று சமூக வாழ்வில் நாகரிகம் எனும் போர்வையின் கீழ் நடைபெறும் அவலங்கள்?ஊரோடு ஒட்டி வாழ்வோம் என்ற மாண்பின் வழி வந்த புது வாழ்வின் சங்கமமா இவை?பழம் பெருமை பேசி பயன் ஆவது என்ன? புதுமைப் பெண்களைத் தேடிய முண்டாசு கவி, வருங்காலத்தில் தம் கண்கள் கசியும் என்று அறிந்து தான் பூவுலகை நீத்தானோ?அல்ல... அல்ல... கவிஞன் சொன்ன பெண்மையில் பிறழேதும் இல்லைதான்.தவறாகப் புரியப்பட்டு,உண்மை திரிக்கப்பட்டு இன்று திரிகின்றது நம் பெருமை.சந்தித்த, சந்திக்கின்ற, சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க போராடும் நாம் இன்று கலாச்சார தூய்மைக்கேட்டைப் பொருட்படுத்துவதில்லை.அலட்சியம்.. எங்கும் அலட்சியம்; எதிலும் அலட்சியம்.போகும் பாதை முட்கள் நிறைந்தவை என்பதை அறிந்தோமா? அறியாமை தவறில்லை. ஆனால், அறிய விரும்பாமை மன்னிக்க இயலாதது அல்லவா? இன்னும் சிந்திக்க வேண்டுமா? காலம் கடந்து விட்டது. மாற்றம் இல்லையேல் மறுக்கப்படுவோம்;ஒடுக்கப்படுவோம். இறுதியில் அகில உலகில் அடியோடு மறக்கப்படுவோம்.