பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்பது மூத்தோர் வார்த்தை.அடியோடு ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது பெண்ணினம்.சங்க காலத்தில் தலை நிமிர்ந்து நின்ற பெண்கள், பின்பு கால சுழற்சியில் சிக்கி ஒதுக்கப்பட்டிருந்தனர்.பெண்கள் பிறந்தால் அவர்களுக்குக் கள்ளி பால் கொடுத்து கொல்லும் அளவிற்கு நிலைமை மாறி இருந்தது.இந்நிலை அனைத்தும் மாறி இன்று வின்வெளிக்கும் சென்று வந்து விட்டனர் பெண்கள்.பெருமை கொள்ள வேண்டிய விஷயம் தான் இது.இப்படி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் பீடு நடை போட்டாலும்,வரைமுறைக்கு அப்பாற்பட்டும் பல செயல்களில் பெண்கள் சிலர் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.இது இன்றைய பெண்களின் துணிச்சலைப் பிரதிபலித்தாலும், இதில் பெருமை கொள்ள என்ன இருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் சற்று கூர்ந்து சிந்திக்க வேண்டும் என்பது என்னுடைய ஆழமான கருத்தாகும்.
பெண்ணியம் என்ற கோட்பாட்டைப் பற்றி பேசுவது சிலருக்குச் சுலபமாக இருக்கலாம். ஆனால், அக்கோட்பாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பது தவறு என்றே நான் எண்ணுகிறேன். ஆணுக்கு நிகராக எதையும் செய்வது தான் பெண்ணியம் என்றால், அது மிகப் பெரிய கருத்து பிழையாகும். பெண்ணியத்தில் அடிப்படையாக விளங்குவது சம உரிமை எனும் கோட்பாடு தான். அதாவது, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அங்கங்களில் பெண்களுக்கு சம உரிமையும் பங்கும் அளிப்பதே பெண்ணியம் எனும் கோட்பாட்டின் அடிப்படை தத்துவமாகும். எனினும், இதை உணராத சில புல்லுறுவிகளால், இக்கோட்பாடே இன்றைய சமூக சீர்கேட்டிற்கு வித்திடும் அளவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாகரிகம் நாகரிகம் என்று அநாகரிகத்தையும் நாகரிக பாணியாக்குவது எவ்விதத்திலும் நியாயமாகாது.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ,உடை, பேச்சு, பழக்க வழக்கங்கள் என்று பல கோணங்களில் இருந்து ஆராயலாம்.கற்கால மாந்தர்கள் முறையான ஆடை இன்றி வலம் வந்ததை நாம் குறை கூற இயலாது.எனினும், இக்காலத்தில் அதாவது நாகரிகத்தின் அபரிமித வளர்ச்சியில் இப்பிரச்சனை தலை தூக்குகின்றது என்றால்,யார் குற்றம் இது?சினிமா, ஊடகங்கள்,மேலை நாட்டு மோகம்,பெற்றோர் கவனிப்பின்மை,கூடா நட்பு என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைக்க இயலும்.ஆனால், இவை நியாயமாகப் படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.சிந்திக்கும் ஆற்றல் நமக்கு வழங்கப்பட்டுள்ள வேளையில்,பிறர் மீது பலி சுமத்துவது அபத்தமானது.நன்மை தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றல் உள்ள நாம், அதை நிஜ வாழ்வில் செயலாற்றுவதுதான் மிகவும் குறைந்து விட்டது.
உலகிற்கு நாகரிகம் கற்று தந்து தலை நிமிர்ந்து நின்ற மரபின் தற்கால தலைமுறையா இன்று சமூக வாழ்வில் நாகரிகம் எனும் போர்வையின் கீழ் நடைபெறும் அவலங்கள்?ஊரோடு ஒட்டி வாழ்வோம் என்ற மாண்பின் வழி வந்த புது வாழ்வின் சங்கமமா இவை?பழம் பெருமை பேசி பயன் ஆவது என்ன? புதுமைப் பெண்களைத் தேடிய முண்டாசு கவி, வருங்காலத்தில் தம் கண்கள் கசியும் என்று அறிந்து தான் பூவுலகை நீத்தானோ?அல்ல... அல்ல... கவிஞன் சொன்ன பெண்மையில் பிறழேதும் இல்லைதான்.தவறாகப் புரியப்பட்டு,உண்மை திரிக்கப்பட்டு இன்று திரிகின்றது நம் பெருமை.சந்தித்த, சந்திக்கின்ற, சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க போராடும் நாம் இன்று கலாச்சார தூய்மைக்கேட்டைப் பொருட்படுத்துவதில்லை.அலட்சியம்.. எங்கும் அலட்சியம்; எதிலும் அலட்சியம்.போகும் பாதை முட்கள் நிறைந்தவை என்பதை அறிந்தோமா? அறியாமை தவறில்லை. ஆனால், அறிய விரும்பாமை மன்னிக்க இயலாதது அல்லவா? இன்னும் சிந்திக்க வேண்டுமா? காலம் கடந்து விட்டது. மாற்றம் இல்லையேல் மறுக்கப்படுவோம்;ஒடுக்கப்படுவோம். இறுதியில் அகில உலகில் அடியோடு மறக்கப்படுவோம்.